தவெகவுக்காக களமிறங்கிய திடீர் வேட்பாளர்கள்.. விஜய் அலை ரியல் தான் போல.. வாரி வழங்கிய மதுரை!
மதுரை: தவெக சார்பாக களமிறக்கப்பட்ட திடீர் வேட்பாளர்களும், போட்டியிட விரும்பவில்லை என்று சொன்ன வேட்பாளர்களையும் மதுரை மக்கள் வெற்றி பெற வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கும் மதார் பதூருதீன், கோபிசன் உள்ளிட்டோரின் பின்னணியை கூட பார்க்காமல் மதுரை மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தவெக அடைந்துள்ள வெற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அதிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 8ல் வென்று அசத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மதுரையில் கடைசி நேரத்தில் களமிறங்கிய திடீர் வேட்பாளர்களும், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிய வேட்பாளர்களும் கூட மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர்.

அதன்படி மதுரை தெற்கு தொகுதியில் முதலில் ஜோ பீட்டர் என்பவரை விஜய் வேட்பாளராக அறிவித்தார். ஆனால் அந்த தொகுதியில் செளராஷ்டிரா வாக்குகள் அதிகம் என்பதால், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினர். இதனால் எந்தவித அறிவிப்பும் இன்றி தவெக வேட்பாளராக கோபிசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளராக இருந்தவர் கார்த்திகேயன். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர். இவரை சம்மந்தமே இல்லாமல் மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக தவெக களமிறக்கியது. அவரும் அமைச்சர் மூர்த்தியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் மதார் பதூருதீன் தான் மிகப்பெரிய ஹைலைட். இவரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் உத்தமபாளையம். ஆனால் சென்னையில் வசித்து வருகிறார். தவெகவில் இணைந்த பின், டிவி விவாதங்களில் ஏராளமான கிண்டலுக்கு உள்ளானவர். தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லை என்று வெளிப்படையாக கூறி இருந்தார்.
ஆனால் திடீரென மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி ஆகியோரை வீழ்த்தி மிகப்பெரிய ஷாக்கை கொடுத்துள்ளார். சோழவந்தான் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பையா அக்கட்சியிடம் சீட் கேட்டு வந்தார். ஆனால் அதிமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை.
இதனால் விரக்தியடைந்த கருப்பையா தவெகவில் இணைந்து உடனடியாக சீட் பெற்றுக் கொண்டார். தனித் தொகுதியான இந்த தொகுதியில் 30 ஆண்டுகளாக சிட்டிங் எம்எல்ஏ வென்றதே கிடையாது. அந்த அதிர்ஷ்டமும் சேர்ந்து கருப்பையா மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இது மதுரை மக்களிடையே விவாதப் பொருளாகவும் மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications