ஆசிரியர் நியமன நடைமுறை.. "உடனடியாக மறு ஆய்வு செய்யுங்கள்" - சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: கல்வி நிறுவனங்களுக்கு நேரில் போய் படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமனம் நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்யுமாறு பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர், ஆங்கில பாடப்பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியராக தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ் பாடப்பிரிவில் பி.எட். படிப்பை முடித்த பிறகு பிஏ ஆங்கிலம் படித்ததாலும், தொலைதூரக்கல்வி முறையின் கீழ் படித்ததாலும் மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை" எனக் கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனம்.. உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: தமிழக அரசு அரசாணை
"ஆசிரியர் பணிக்கு தகுதி கிடையாது"
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார். மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்றும் தெரிவித்தார்.
தகுதியானவர்கள் யார்?
இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள்தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள்.
தமிழகத்தில் கல்வித் தரம்
அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், அதன் பெரும் தொகை ஆசிரியர்களின் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது என குறிப்பிட்டார். கல்வியின் தரத்தை மேம்படுத்த திறமையான, தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
உத்தரவு
நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜரான தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை சுட்டி காட்டிய நீதிபதி, ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.