‘மலை’க்காக போட்ட பிளான்..ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஆயுதம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் எடப்பாடி!
சென்னை : தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது பாஜகவா அதிமுகவா என எழுந்த பிரச்சனையில், பாஜகவை ஓவர்டேக் செய்வதற்காக, தமிழ்நாடு முழுவதும் பயணித்து அதிமுகவை வலுப்படுத்த இபிஎஸ், ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஒற்றைத் தலைமை மோதல் எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம் அப்செட்டாகி இருக்கிறார். அவர் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், போட்ட திட்டத்தை மாற்றாமல், தனது சுற்றுப் பயணத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகவும் ஒரு அஸ்திரத்தை வைத்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

எதிர்க்கட்சி சர்ச்சை
திமுக அரசுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி, போராட்டங்களை நடத்தி லைம்லைட்டில் இருந்து வருவதால் அதிமுக குறித்து பொதுமக்கள் மத்தியிலேயே அதிருப்தி நிலவியது. பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். இதையடுத்து, இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக இரட்டைத் தலைமை, தமிழகம் முழுவதும் பயணித்து கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தனர்.

சுறுசுறுப்பை ஏற்படுத்த
கடந்த 10 ஆண்டுகாலமாக ஆளுங்கட்சியாக இருந்துவிட்டு இந்த முறை ஆட்சியை பறிகொடுத்திருக்கும் நேரத்தில், எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படவில்லை என்ற பேச்சு அதிமுக தலைமையை அசைத்துப் பார்த்தது. தொண்டர்களின் அதிருப்தியைக் களைந்து சுறுசுறுப்பு ஏற்படுத்தும் வண்ணம் இனி தொடர்ந்து களத்திலேயே இருக்க வேண்டும் என அதிமுகவின் இரட்டை தலைமையான ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முடிவெடுத்தனர்.

சுற்றுப் பயணம்
கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டுமென்றால், கீழ்மட்ட அளவில் வேலைகளை முடுக்கிவிட வேண்டும். அடிமட்ட அளவில் உள்ள நிர்வாகிகளை, தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றும் திட்டமிட்டனர். அதன்படி, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனத் திட்டமிட்டனர்.

ஒற்றைத் தலைமை
இதற்கிடையே தான், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடாகக் கிளம்பியது. ஒற்றைத் தலைமை பேச்சு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு டென்ஷனை ஏற்படுத்திய நிலையில், அவர் கொந்தளித்துள்ளார். ஒற்றைத் தலைமை பிரச்சனை இந்த நேரத்தில் தேவையற்றது என்றும், கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் பேசியுள்ளார்.

ஓ.பி.எஸ் ஆலோசனை
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அப்செட்டாகியுள்ள ஒ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வரும் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து ஓ.பி.எஸ் ஆலோசித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

டூர் பிளான்
இது ஒரு பக்கம் நடந்தால், எடப்பாடி பழனிசாமியோ, திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் பெரும் கூட்டம் கூடியதால் தெம்பாக உணர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பொதுக்குழு உறுப்பினர்களையும்
கட்சியை பலப்படுத்தி, எதிர்க்கட்சி நாங்கள்தான் என நிரூபிப்பதற்காக திட்டமிடப்பட்ட இந்த சுற்றுப் பயணத் திட்டத்தை தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு எதிரான அஸ்திரமாகவும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களையும் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2 இன் 1
ஆக, எதிர்க்கட்சி பிரச்சனையை சமாளிக்க போட்ட திட்டம், திடீரென்று கிளம்பிய ஒற்றைத் தலைமை விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு கைகொடுத்துள்ளது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர். இரண்டு நோக்கங்களிலும் இபிஎஸ் சிக்ஸர் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications