அமித்ஷாவுக்கு பதிலடி.. பாஜகவை அடித்து ஆட ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் உள்ள காரணம்?
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக தொடர்ச்சியாகக் கூட்டணி ஆட்சி என்று கூறி வந்த நிலையில், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மட்டுமே கூறி வந்தது. இந்த நிலையில் திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் பேச்சுக்குப் பின் உள்ள காரணம் குறித்துப் பார்க்கலாம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நாளில் இருந்து கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை பாஜக பிடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் கூட்டணி ஆட்சி இதுவரை நடந்ததில்லை என்பதால், அதிமுக கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டதா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்து வந்தார்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை. இந்த சூழலில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் நோக்கமாக இருந்தது.
ஏனென்றால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டதை அதிமுக தொண்டர்களே விரும்பவில்லை. இதனைச் சரி செய்யும் வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் எந்த தவறும் கிடையாது, பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த சம்பவம் உள்ளிட்டவற்றைத் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது.
அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளில் எந்த சேதாரமும் இல்லை என்பதை எடுத்துக் கூறும் வகையில் கூட்டம் கூடியது. இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். ஆனால் பாஜகவினர் தொடர்ச்சியாகக் கூட்டணி ஆட்சி என்று கூறி அதிமுகவை சீண்டிக் கொண்டே இருந்தனர்.
இதனால் அதிமுகவை வம்புக்கு இழுத்து வரும் பாஜகவுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் நோக்கமாக இருந்தது. அதேபோல் பாஜகவுக்கு அடங்கிப் போகாமல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதையும் அதிமுகவினர் விரும்பினர். இந்த நிலையில் திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தார். திருவாரூர் திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவுக்கான செல்வாக்கு குறைந்த பகுதி என்று டெல்டா மாவட்டங்களைச் சொல்லலாம். கடந்த சில தேர்தல்களாக டெல்டா மாவட்டங்களில் திமுகவின் கைகளே ஓங்கி இருந்தது. இந்த நிலையில் பாஜகவுக்குப் பதிலடி கொடுக்க சரியான இடமாகத் திருவாரூரை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்திருக்கிறார்.
இதன்பின் திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க அதிமுக ஒன்றும் ஏமாளி அல்ல.. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்.. வேண்டாம் என்றால் வேண்டாம்.. அதைப்பற்றி கவலையில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளார். இதன் மூலமாக பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக எச்சரிக்கை கொடுத்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தொகுதிப் பங்கீட்டில் பாஜக கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. 40 தொகுதிகள் வரை பாஜக கேட்டால், அதிமுகவுக்குச் சிக்கல்தான். இதனால் பாஜகவைத் தொடக்கம் முதலே எச்சரிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமைக்குக் கீழ் பாஜக இருப்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதிலும் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications