ஓஹோ.. அந்த 'காட்டமான' பேச்சுக்கு பின்னாடி இருப்பது இவரா? - அப்போ நிர்மலா.. இப்போ நேரடியா பிரதமரே..!
சென்னை : முதல்வர் ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மத்திய அரசுக்கு அளிக்கும் வரி வருவாய் மிக அதிகம் என்றும், ஆனால் திருப்பி கிடைப்பது மிகக் குறைவாக இருக்கிறது என்பதையும் புள்ளி விவரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
மாநில அரசுகளின் உரிமைகளுக்கு குரல் கொடுத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சு நாடு முழுவதும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதி பங்கீட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ஸ்டாலின் நேற்றைய பேச்சிலும் நிதி அமைச்சர் பிடிஆரின் இன்புட் பெருமளவில் இருந்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி முன்னிலையில்
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று தமிழ்நாட்டுக்கு வந்திருந்த பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அந்த விழாவில், பிரதமர் மோடியிடம் நேரடியாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அதிலும் முக்கியமாக, நாட்டின் வளர்ச்சியிலும், மத்திய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிக முக்கியப் பங்களிப்பைத் தருகிறது என்பது பிரதமருக்கே தெரியும் எனக் கூறி அவர் தொடர்ந்து ஆற்றிய உரை முழுக்க மத்திய அரசை குற்றம்சாட்டுவதாகவே இருந்தது.
செல்வது அதிகம் வருவது குறைவு
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்தியாவின் ஜிடிபி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு. ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு. ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே எனத் தெரிவித்தார்.
மத்திய - மாநில பங்களிப்பு
மேலும், தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, மத்திய அரசும் - திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும். அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பும் மகத்தானது. இத்தகைய இணைத் திட்டங்களை மத்திய அரசு தொடங்கும்போது தனது நிதிப்பங்கை அதிகமாக அளித்தாலும், காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து, மாநில அரசு செலவிட வேண்டிய நிதிப் பங்கை உயர்த்துகிறது.
பாதியில் கழன்றுகொண்டால்
மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்போடு, பயனாளிகளின் பங்கையும் முன்னிறுத்தி, பல திட்டங்கள் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படுகிறது. அந்தத் தொகையை பயனாளிகள் செலுத்த முடியாதபோது, மாநில அரசுகள்தான் பயனாளிகளின் பங்களிப்பையும், சேர்த்து செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கிறது. எனவே, ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் ஒன்றிய அரசின் பங்கானது, திட்டம் முடியும்வரை தொடர வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
நிதி அமைச்சர் பிடிஆர்
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதுதொடர்பாக தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். மத்திய நிதி அமைச்சரிடமும், கடிதங்கள் வாயிலாகவும் நேரிலும் தமிழ்நாட்டிற்கான வரி வருவாய் பங்கீடு குறித்த பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சராக பொறுப்பேற்றது முதலே இதன் காரணமாக நிர்மலா சீதாராமனுக்கும், பிடிஆருக்கும் மறைமுகமான மோதல் போக்கே நிலவுகிறது. அண்மையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது கூட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்க்க அழைத்துச் சென்று தமிழகம் சார்பில் கோரிக்கை விடுத்தார் பிடிஆர்.
காட்டமாக தாக்கும் நிதி அமைச்சர்
தமிழக நிதி அமைச்சரின் கோரிக்கைகளுக்கு நிர்மலா சீதாராமன் செவிசாய்க்காமல் இருந்து வரும் நிலையில்தான், சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் கூட கடுமையாக மத்திய அரசை விமர்சித்துப் பேசினார் பழனிவேல் தியாகராஜன். இந்த வரி வருவாய் பங்கீடு பிரச்சனை வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் பேச்சில் இந்த விஷயமும் உள்ளடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனி ஆளாக மத்திய நிதி அமைச்சரோடு மோதிக் கொண்டிருந்த அமைச்சர் பிடிஆர், முதல்வர் ஸ்டாலினை தற்போது பிரதமர் மோடிக்கு முன்பு இதுபற்றி பேச வைத்திருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.