ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவமானம்... குடியரசு தின அலங்கார ஊர்தி நிராகரிப்புக்கு கனிமொழி கண்டனம்
தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். இவர்களை பற்றிய மத்திய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாகவும் கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி வரும் 26ஆம் தேதி புது டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். இந்த அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
அதற்கு மத்திய அரசு சொன்ன காரணமோ அதிர்ச்சியின் உச்சம். பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இடம் பெற்றால்தான் அனுமதிப்போம் என கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது.
வேலுநாச்சியார், பாரதியார்
தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ. உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார் , பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ. உ.சி, வேலுநாச்சியார் , பாரதியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
கடும் கண்டனம்
தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
திரும்ப பெற வலியுறுத்தல்
வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
மேற்குவங்க மாநிலத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் வாகன ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன. அதற்கு விதிமுறைகள் காரணமாக சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஆகியோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.