ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம்.. நடந்தது என்ன? சென்னை ஐஐடி பரபர விளக்கம்
சென்னை: சென்னை ஐஐடியில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதற்கும் ஐஐடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. வளாகத்திற்கு வெளியே உள்ள தேனீர் கடைக்கு மாணவி சென்ற போது அத்துமீறல் நடைபெற்றுள்ளது என்று விளக்கம் அளித்துள்ள சென்னை ஐஐடி, மாணவிகள் வளாகத்தை விட்டு வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இந்த கல்வி நிறுவனத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐஐடியில் ஆராய்ச்சி கல்வி படித்து வரும் மாணவி ஒருவருக்கு கேண்டீனில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை ஐஐடி மாணவி ஒருவர், கேண்டீனில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியிடம் கேண்டீனில் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, ஐஐடி மாணவி உடனடியாக புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கேண்டீனில் பணியாற்றிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராமை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் விலகாத நிலையில் சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. சென்னை ஐஐடி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
ஜனவரி 14 (நேற்று) மாலை 5.30 மணியளவில் வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள தேனீர் கடையில் ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள், தொல்லை கொடுத்த நபரை போலீசில் ஒப்படைத்தனர். ஐஐடி வளாகத்திற்கு வெளியே உள்ள தேனீர் கடையில் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சென்னை ஐஐடியுடன் எந்த தொடர்பும் இல்லை. ஐஐடி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. வளாகத்திற்குள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவிகள் வளாகத்தை விட்டு வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications