நீட் மசோதா திருப்பி அனுப்பிய விவகாரம் : நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் - பாஜக புறக்கணிப்பு
நீட் மசோதா திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுனர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஆளுனர் தெரிவித்துள்ள விளக்கத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நீட் தேர்வை பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, நீட் மசோதா குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தின் முடிவில், நீட் மசோதாவை எவ்வித மாற்றமும் செய்யாமல் ஆளுனருக்கு மீண்டும் அனுப்ப முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சியிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிடுமாறு கேட்டு, பாஜக, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதேநேரம், இந்தக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடந்த நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் கலந்து கொண்ட நிலையில், நீட் தேர்வு விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியாது என கூட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த முறை நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications