மக்களே அலர்ட்.. சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
சென்னை: சென்னையில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் எனவே மக்கள் கவனமாக இருக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பருவ கால நோய்கள் அதிகரிப்பது வாடிக்கைதான். மழைக்காலத்தில் குளிர்ந்த நிலை நிலவுவதாலும், இது வைரஸ் பரவலுக்கு சாதகமான சூழல் என்பதாலும் எளிதில் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் பரவி விடுகிறது. குளிர்காலத்தில் வைரஸ்கள் எளிதில் நமது சுவாச பாதையை தாக்கக்கூடும். இதனால் இன்ஃப்ளூயன்சா, கொரோனா, ரெஸ்பிரேட்டரி சின்ஸியல் வைரஸ் போன்ற வைரஸ்களால் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவரிடம் இருந்து மழைக்காலங்களில் எளிதில் மற்றவர்களுக்கு பரவி விடுகிறது இன்புளூயன்ஸா, ரெஸ்பிரேட்டரி சின்சியல் வைரசால் ஏற்படும் நோய்கள் ஒரு வாரத்தில் குணமாகிவிடும். எனினும் இந்த 7 நாட்களிலும் தொண்டை வலி, மூக்கு ஒழுகல், லேசான தலைவலி, உடல் வலி, உடல் சோர்வு, இருமல் பாடாய்படுத்தி விடும். இது சாதாரண நோய்தான். ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
ஆனால், இந்த அறிகுறிகளுடன் கூடுதலாக மூச்சுவிடுவதில் சிரமம் இருத்தல், மூச்சுத்திணறல், பிதற்றல் நிலை, தலைச்சுற்று இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தால் தீவிர வைரசாக இருக்கக்கூடும். எனவே உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி மழைக்கால நோய்கள் பாடாய்படுத்திக் கொண்டு இருக்க தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சலும் அதிகரித்து உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்களையும் தமிழக அரசு நடத்தி வருகிறது. இது ஒருபக்கம் என்றால் தற்போது டைப்பாய்டு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேருக்கு டைபாய்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
டைப்பாய்டு என்பது பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் ஒரு வகை நோயாகும். சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியா என்ற ஒரு பாக்டீரியாவால் இது உண்டாகிறது. இந்த பாக்டீரியா உணவில் கலந்து உணவை கெட்டுப் போக வைக்கும் இந்த கெட்டுப்போன உணவை சாப்பிடுவதன் மூலம் உடலுக்குள் பரவி சில நேரங்களில் இது உயிர்க்கொல்லி நோயாகவும் மாறிவிடுகிறது. தரமற்ற குடிநீர், சுகாதாரமற்ற உணவு ஆகியவற்றால் இந்த நோய் பரவுகிறது.
உடல்சோர்வு, கடுமையான காய்ச்சல், வாந்தி, பசியின்மை, தலைவலி, தொண்டைவலி, உடலில் தடுப்புகள், வயிற்று உபாதைகள் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். டைப்பாய்டு காய்ச்சலை பொறுத்தவரை ஆன்டிபயாட்டிக் மருந்து நிவாரணமாக உளது. . வீட்டிலேயே வைத்து மருத்துவரின் ஆலோசனையின் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுக்கலாம்.
இந்த மருந்துகளை எடுக்கத் தொடங்கிய 2 அல்லது 3 நாட்களுக்குள் அறிகுறிகள் குறைய துவங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். காய்ச்சல் முழுவதுமாக குறையும் வரை முழு ஓய்வில் இருக்க வேண்டும், திரவ ஆகாரங்களை அதிகம் அருந்த வேண்டும். குறிப்பாக தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதாவது அடிக்கடி கைகளை கழுவததல், நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். கெட்டுப்போன உணவை சாப்பிடக்கூடாது. கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்'போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications