திருந்திய பிறகும் தொல்லை கொடுக்கும் போலீசார் ... வேறு வழியில்லை...ரவுடி செய்த காரியம்
சென்னை: திருந்தி வாழ்வதாக கூறிய பிறகும் போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக கூறி செல்போன் டவர் மீது ஏறி ரவுடி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை கொடுங்கையூர் சேலை வாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற ஓட்டை வடை மணி(29). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது.

சென்னை ரவுடி
மணிகண்டன் மீது முட்டை கோபி என்ற ரவுடியை கொலை செய்த வழக்கு உட்பட 7 வழக்குகள் உள்ளன தற்போது ரவுடி மணிகண்டன் வழக்குகளில் எதுவும் சிக்காமல் திருந்தி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் தொடர்ந்து தனக்கு தொந்தரவு தருவதாக கூறி இன்று காலை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை ஹை ரோடு சின்னான்டிமடம் அருகே செல்போன் டவர் மீது மணிகண்டன் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தற்கொலை மிரட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் நண்பர்கள் மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கூறினார்கள். ஆனால் பாதி அளவு செல்போன் டவரில் ஏறிய ரவுடி மணிகண்டன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி கொண்டே இருந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

போலீசார் பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவம் அறிந்து நேரில் வந்த கொடுங்கையூர் போலீசார் ரவுடியிடம் சமாதானம் பேசினர் 20 நிமிட போராட்டத்திற்கு பின்பு மணிகண்டன் பத்திரமாக கீழே இறங்கி வந்தார் அவரை கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு
இது குறித்து மணிகண்டன் குடும்பத்தினர் கூறுகையில், திருந்தி வாழும் மணியை இன்பார்மராக மாறி குற்றவாளிகளை பிடித்து கொடுக்க சொல்லி போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். இதற்கு மணிகண்டன் முடியாது என்று கூறியதால் பழைய வழக்கில் அவரை கடந்த வாரம் சிறைக்கு அனுப்ப போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். நீதிபதி முன்பாக தான் குற்றம் செய்யவில்லை என்றும் தான் திருந்தி வாழ்வதாக கூறியதை அடுத்து நீதிபதி விடுவித்தாலும் மணிகண்டனை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications