ஆருத்ரா மோசடியில் ஏமாந்தவர்களுக்கு மீண்டும் பணம் கிடைக்குமா? ரூ.100 கோடி சொத்துகளை ஏலம் விட முடிவு!
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை ஏலம் விட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடி கோடியாக பணம் பெற்றுவிட்டு கம்பி நீட்டியது. இந்த நிறுவனம் சொன்னதை நம்பி ஆயிரக்கணக்கானோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து பணத்தைப் பறிகொடுத்தனர்.

ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஷ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். மாநில பொறுப்பு வாங்க ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை பாஜக நிர்வாகிகளுக்கு ஹரீஷ் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும், ஆருத்ரா மோசடியில் பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.
ஆருத்ரா நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 22 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆருத்ரா நிறுவன இயக்குநர் ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி அதில் பணத்தை முதலீடு செய்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது, மோசடி பணம் யார் யாருக்கெல்லாம் கைமாற்றப்பட்டது என்பது குறித்தும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 49 சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 49 நேரடி சொத்துகள் விற்பனை உத்தரவு பெறுவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்திற்காகப் பணியாற்றிய 7,000 முகவர்கள் அடையாளம் காணப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக 500 ஏஜென்ட்களிடம் இருந்து சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆருத்ரா மோசடி கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் சொத்துகள் ஏலம் விடப்பட்டு பெறப்படும் தொகை, ஆருத்ரா மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்து, ஏமாந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதிமன்றம் மூலமாக வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications