டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ஆரவார கூட்டம்.. 165 கோடிக்கு விற்பனை.. சென்னையை முந்தி மதுரை முதலிடம்
சென்னை: தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் சுமார் 165 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.
Recommended Video
கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் திக்குமுக்காடினர்.

குடிகாரர்கள் ஆரவாரம்
ஆங்காங்கு மதுக்கடைகளை நோக்கி ஆரவாரம் செய்து சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் 1 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் குடிமகன்கள் காத்து நின்றனர். இதனால் மது பாட்டில்கள் மளமளவென விற்று தீர்ந்தன.

மதுரை முதலிடம்
நேற்று ஒரே நாளில், மொத்தம் 164 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாக பெருமைப்படும் மதுரைக்கு முதலிடம் கிடைத்துள்ளது வரலாற்று சோகம். ஏனெனில், தமிழகத்திலேயே, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.96 கோடி ரூபாய் அளவிற்கு மது பானம் விற்பனை நடைபெற்று உள்ளது.

2வது இடம்
மக்கள் தொகையில் மதுரையை விட அதிக மடங்கு கொண்ட சென்னை மண்டலத்தில் கூட 42.96 கோடி ரூபாய்க்குதான் மது விற்பனை நடைபெற்றது. எனவே, சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

திருச்சி, சேலம்
திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும் என ரூ.164.87 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 மாவட்டங்களில் இல்லை
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications