கங்கையில் கொரோனா சடலங்கள்... மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை - கமல் நச்
நமாமி கங்காவில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட நமாமி கங்காவில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதப்பதாக மநீம தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன என்று மோடி அரசை கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர்.

உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கங்கை, யமுனை ஆறுகளில் சடலங்கள் மிதந்து வருகின்றன. வெள்ளை துணியில் சுற்றப்பட்ட சடலங்கள் ஆற்றில் மிதந்து வரும் அவற்றை நாய்கள் கடித்து குதறி கரைகளில் வீசுகின்றன. இதனால் ஆறுகளும் ஆற்றங்கரை பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது.
கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது அதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவியல் குவியலாக மிதந்து வருவதால் கங்கை ஆறு மீண்டும் மாசடையத் தொடங்கியுள்ளது.
பீகார் மாநிலம் கதிஹாரில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் ஆறுகளில் கொட்டப்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே போல பக்சர் மாவட்டத்தில் உள்ள செளசா கிராமத்தில் கங்கை ஆற்றின் கரையோரத்தில் சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்கள் உடல்களை அவர்களது உறவினர்கள் கங்கை ஆற்றில் வீசி செல்கின்றனர்.
ஆறுகளில் சடலங்கள் மிதப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட நமாமி கங்காவில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன என்று மோடி அரசை கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications