2 நாட்களாக வெளியே கூட போகவில்லை.. அங்கேயே பெட் போட்டு, சாப்பிட்டு.. இஸ்ரோ விஞ்ஞானிகளின் தியாகம்
சென்னை: சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்று இருக்கும் இதற்காக பெரும் உழைப்பையும், அறிவையும் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் தியாகங்களையும், அவர்கள் பட்ட கஷ்டங்களையும் பார்ப்போம்.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலாவுக்கு செயற்கைக்கோள் அனுப்பியுள்ள நிலையில் இந்த வரிசையில் 4 வது நாடாக இடம்பிடிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியா போராடி வருகிறது. இதற்காக இஸ்ரோ 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பியது. ஆனால், அது தோல்வி அடைந்தது.

அதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி சந்திரயான் 2 விண்கலம் ஏவப்பட்டது. அதன் ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதியதால் வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தை உருவாக்கினர். கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட இதை, அதன் தெற்கு பகுதியில் இந்த தரையிறக்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். சந்திராயன் 3 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது. அதன் பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது.
இப்படி பூமியையும் நிலவையும் சுற்றி இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்து இருக்கிறது சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர். இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையையும், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்து உள்ளார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
இப்படி இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்து இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்த வெற்றிக்கு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. சந்திரயான் 1, சந்திரயான் 2 திட்டங்கள் வெற்றிபெறாததன் காரணமாக எழுந்த விமர்சனங்கள், சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்தும்போதும் எழுந்தன.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினார்கள் விஞ்ஞானிகள். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளன. பெங்களூர் இஸ்ரோ அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட லைவ் வீடியோவில் ஏராளமான விஞ்ஞானிகள் கணினியின் முன்பாக அமர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.

அவர்கள் யாருமே கடந்த 48 மணி நேரமாக வீட்டுக்கே செல்லவில்லை. கடந்த 48 மணி நேரத்துக்கு முன்பாகவே அவர்கள் அனைவரையும் அந்த அறைக்குள் அழைத்து வந்துவிடுவார்களாம். அதை விட்டு வெளியில் செல்ல முடியாதாம். அந்த காம்பிளக்சுக்கு உள்ளேயே சிறிது சிறிதாக படுக்கைகள் உள்ளன. அதில்தான் அவர்கள் படுக்க வேண்டும்.
சாப்பாட்டுக்கு கூட வெளியில் செல்ல முடியாது. அவர்கள் இருக்கும் இடத்திற்கே சாப்பாடும் வந்துவிடுமாம். இப்படி இரவு பகல் பாராமல் உழைத்து தியாகம் செய்த காரணத்தால்தான் சந்திரயான் 3 திட்டத்தில் வென்று இந்தியா இன்று சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது. வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளே!












Click it and Unblock the Notifications