அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. நீதிபதி உத்தரவு!
சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு அந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் மற்றும் 3 பேர் இன்று மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியுள்ளார் விக்னேஷ்.
ரத்த வெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர் பாலாஜியை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர், தற்போது அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ்வரன் மீது கிண்டி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர் மீது தாக்குதல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல், தமிழ்நாடு மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டப்பிரிவு என 127 (2),132, 307, 506 (2) உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சைதாப்பேட்டை பெருநகர 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் விக்னேஷ்வரன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், விக்னேஷ்வரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி வரும் 27 ஆம் தேதி வரை விக்னேஷ் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரனை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications