உதயநிதி ராஜினாமா செய்வாரா? மன்னிப்பு கேட்பாரா? போலீஸ் பாயுமா? கொளுத்தி போடும் பாஜக- சனாதன சர்ச்சை!
சென்னை: சனாதன தர்மம தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? என தமிழ்நாடு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் தமது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக எழுதி உள்ளதாவது: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகள்: சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது என்? என சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளது உயர்நீதி மன்றம். இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என யாரும் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு உரிமையில்லை என்றும் இத்தகைய பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை ஆட்சியாளர்கள் உணருவதோடு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது போன்று மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் போக்கினை ஏற்படுத்துவதை விடுத்து, உடல் நலத்திற்கு தீங்கினை ஏற்படுத்தும் மது மற்றும் போதை பொருட்களை அழிப்பது, ஊழலை ஒழிப்பது, தீண்டாமை ஒழிப்பு போன்ற சமூக சீர்கேடுகளை ஒழிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவது சிறந்தது என்று அறிவுறுத்தியுள்ளது.
என்ன செய்வார் முதல்வர் ஸ்டாலின்?: சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதித்து நடந்து கொள்வாரா? தி மு க அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அமைச்சர் பதவி போனாலும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உயர்நீதி மன்றத்தின் கருத்துகளை மதித்து மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா? இனி சனாதன தர்மம் அதாவது ஹிந்து மதம் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிடுவாரா? இப்போதாவது நீதிமன்றத்தின் கருத்துப்படி அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? இவ்வாறு பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications