அட போங்கய்யா.. இப்பவும் களத்திற்கு வராத விஜய்.. பனையூர் போய் சந்தித்த சென்னை தூய்மை பணியாளர்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 11வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை தன் பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியை தனியாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மாநகராட்சி பிரதான அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் இன்றுடன் 11வது நாள் எட்டியுள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்
துப்புரவு பணியாளர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். முக்கியமாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், இயக்கங்களே நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக சேகர் பாபு போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பனையூரில் விஜயுடன் சந்திப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு தவெக சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அவர்கள் நடிகரும், தவெக தலைவருமான விஜய் சந்தித்து பேசியுள்ளார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களை நேரடியாக வரவழைத்து விஜய் சந்தித்து பேசியுள்ளார்.
தவெக மாவட்ட நிர்வாகிகள், ஆதவ், நிர்மல் குமார் ஆகியோர் தூய்மை பணியாளர்களை நேரடியாக சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜய் ஏன் அவர்களை நேரில் சந்திக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதையடுத்து விஜய் தூய்மை பணியாளர்களை நேரடியாக வரவழைத்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பேசியுள்ளார்.
மீண்டும்.. மீண்டுமா
இந்த சந்திப்பின் போது விஜயுடன் தவெக நிர்வாகிகள் உடனிருந்தனர். இதனை தவெகவினர் வரவேற்கலாம், மற்ற கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து விஜய்யை விமர்சித்து வருகிறார்கள். "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை, அவர்களின் போராட்டக் களத்திற்கு சென்று ஆதரவளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். விஜய் தொடர்ந்து பனையூர் பண்ணையார் அரசியல் செய்கிறார்." என்று விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications