இன்று சசிகலா பிறந்த நாள்:வெளியாகிறது டிடிவி தினகரன் முக்கிய அரசியல் அறிவிப்பு?எதிர்பார்க்கும் அதிமுக
சென்னை: அதிமுகவின் முன்னாள் தற்காலிக பொதுச்செயலாளரான சசிகலாவின் 67-வது பிறந்த நாளான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் மிக முக்கியமான அரசியல் தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று அதிமுக வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்தார். இந்த தண்டனை காலம் முடிந்ததும் தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு மிக மிக பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சசிகலாவும் தீவிர அரசியலில் மீண்டும் குதிக்கலாம் என காத்திருப்புடன் சென்னை வந்தார். ஆனால் களநிலவரம் எதுவும் அவருக்கு சாதகமாக இல்லை. அப்போது சட்டசபை தேர்தல் காலமும். அதனால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என ஒரு அறிக்கை கொடுத்து ஒதுங்கிவிட்டார்.

ஆடியோ அரசியல்
சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இதனை சாக்காகப் பயன்படுத்தி சசிகலா ஆட்டத்தை தொடங்கினார். இந்த முறை சசிகலா கையில் எடுத்தது ஆடியோ அரசியலை. அதிமுக, அதிமுக தொண்டர்களுக்கு போன் போட்டு பேசி அந்த ஆடியோவை ஊடகங்களுக்கு கொடுத்தனுப்புவதை சசிகலா வாடிக்கையாக வைத்திருந்தார். இப்படி பல நூறு ஆடியோக்களை ரிலீஸ் செய்து அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கினார் சசிகலா.

ஓபிஎஸ் திடீர் எதிர்ப்பு
ஒருகட்டத்தில் அதிமுகவில் சசிகலா ஆதரவு, எதிர்ப்பு என்பது பகிரங்கமானது. இதனை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதீவிரமாக இறங்கியது. ஆனாலும் அதிமுகவுக்குள் சசிகலா ஆதரவு நிலை வலுவாக இருந்ததால் இந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. ஒருகட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலாவை ஆதரித்து பகிரங்கமாக அறிக்கைவிடப் போகிறார் என்கிற நிலைமை உருவானது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி போனார்கள். இந்த பயணத்துக்குப் பின்னர் திடீரென சசிகலாவை ஓபிஎஸ் எதிர்த்து பேசினார்.

மீண்டும் வழக்குகள்
இதனால் சசிகலா தரப்பு ஆட்டத்தை சற்றே குறைத்துக் கொண்டது. அத்துடன் கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு, பெங்களூரு சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வழக்கை இப்போது கையில் எடுத்திருக்கிறது. இதனால் அதிர்ந்து போன சசிகலா மீண்டும் மீண்டும் பாஜக தமக்கு சட்ட ரீதியான நெருக்கடிகளை கொடுத்து வருகிறதே என நொந்து போனார். இதனால் அடுத்த கட்டமாக இனி தாம் அதிமுகவில் வந்தால் தனி நபராகத்தான் வருவேன்; தினகரன் உள்ளிட்ட்ட குடும்பத்தினர் யாரும் வரமாட்டார்கள் என்பதை பகிரங்கப்படுத்தும் நடவடிக்கைகளில் சசிகலா முனைப்பு காட்டி வருகிறார்.

தினகரன் கட்சி நிலவரம்
தற்போதைய நிலையில் அமமுகவில் பெரும்பாலான மூத்த, 2-ம் கட்ட தலைவர்கள் திமுக, அதிமுக என கட்சி தாவிவிட்டனர். தினகரனும் அறிக்கை அரசியலோடு தன்னை நிறுத்திக் கொண்டார். தினகரனின் கட்சி ரீதியான செயல்பாடுகள் பெருமளவு குறைந்துவிட்டன. இவை அனைத்துமே சசிகலாவின் உத்தரவால்தான் நடந்து வருகின்றன என்பது அமமுகவினர் கருத்து. இந்த நிலையில் இன்று சசிகலாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

சசிகலா வீடியோ
சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினரே நிரந்தர பொதுச்செயலாளரே! தலைமை ஏற்க வருக! என போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் சசிகலா தம் பங்குக்கு வெளியிட்ட வீடியோ ஒன்றில், கொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவி செய்வதே எனக்கு தொண்டர்கள் தரும் பிறந்த நாள் பரிசு என கூறியுள்ளார். இதனிடையே இன்றைய தினம் இன்னொரு மிக முக்கியமான அரசியல் அறிவிப்பை டிடிவி தினகரன் வெளியிடலாம் என்கிற தகவலும் வலம் வருகிறது.

தினகரன் அறிவிப்பா?
அதிமுகவுக்குள் சசிகலா நுழைய முட்டுக்கட்டையாக இருப்பது தினகரனும் அவரது குடும்பத்தினரும்தான். அதனால் அது தொடர்பான ஒரு அறிவிப்பை தினகரன் இன்று வெளியிடலாம் என்கிற ஒரு தகவல் பரவுகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன என்பது உறுதியாகவில்லை. இப்படியான ஒரு அறிவிப்பு வெளியிடப்படுவதால் அதிமுகவில் இனி உச்சகட்ட குழப்பத்தை உருவாக்க முடியும் என்பது சசிகலாவின் கணக்கு. இன்றைய பரபரப்புக்கு தினகரன் தீனி போடுவாரா? அல்லது புஸ்வானமாகுமா? என்பது சிலமணிநேரங்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications