''உதயநிதி அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்''! சனாதன தர்மத்துக்கு ஆதரவாக சசிகலா திடீர் வாய்ஸ்!
சென்னை: சனாதனத்தை பற்றி எதுவுமே தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் எனவும் சசிகலா விமர்சித்துள்ளார்.
வீட்டில் ஓய்விலிருந்து வரும் சசிகலா, திடீரென செய்தியாளர்களை சந்தித்து சனாதன தர்மத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது. சனாதன தர்மத்தை பொறுத்தவரை மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சனாதனத்தை பற்றி உதயநிதிக்கு என்ன தெரியும் என வினவிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துணிச்சல் போதாது என்றும் விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி மீது முதல்வர் ஸ்டாலின் இதுவரை பாய்ச்சல் காட்டவில்லை என்ற கடுப்பில் அவர் இதனைக் கூறியதாக தெரிகிறது.
அதேபோல் மாதம் ரூ.1000 கொடுக்கும் மகளிர் உரிமைத் திட்டம் குறித்தும் சசிகலா கடுமையாக விமர்சித்தார். அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் இதனால் இந்த திட்ட செயல்படுத்த முடியாத திட்டம் எனக் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்படவுள்ள திட்டம் எனக் கூறினார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியிடமே பணம் கேட்கக் கூடிய அவலம் தான் திமுக ஆட்சியில் நடந்துள்ளதாகவும் அதிமுக ஆட்சியில் இது போல் கட்சிக்காரர்கள் யாரேனும் செய்தால் ஜெயலலிதா சும்மா விட்டிருப்பாரா என்று வினவிய அவர், ஏன் ஸ்டாலினால் ஒழுங்கு நடவடிக்கை கூட திமுககாரர்கள் மீது எடுக்க முடியவில்லை என வினவினார்.

மொத்தத்தில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை பற்றியோ, ஓ.பன்னீர்செல்வத்தை பற்றியோ பேசவில்லை. முழுக்க முழுக்க திமுகவையும், முதல்வர் ஸ்டாலினை மட்டுமே விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications