சாட்டையை கையில் எடுக்கும் சசிகலா.. அதிமுக எப்படி சமாளிக்கும்?
அமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது
Recommended Video
சென்னை: எப்படி எப்படியெல்லாம் நினைத்தோமே, அப்படியெல்லாம் எதுவுமே நடக்க காணோம். சிறையில் இருந்தபடியே தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார் சசிகலா!
சசிகலா பீச்சில் ஜெ. சமாதியில் சத்தியம் செய்து விட்டு போகும்போது இருந்த அதிமுகவே வேறு.. இப்போதுள்ள அதிமுகவே வேறு.
அப்போது அமமுக என்ற கட்சி கூட உதயமாகவில்லை. அவர் சிறை சென்றது முதல் அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது என்று சொல்வதா, அல்லது இரட்டை தலைமையில் சிக்கியதால் தேர்தலில் மண்ணை கவ்வியது என்று சொல்வதா தெரியவில்லை.

தினகரன்
ஆனால் வெளியில் நடக்கும் எல்லா விஷயங்களும் சசிகலாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுதான் வருகின்றன. அந்த வகையில், கட்சி ஆபீசுக்கு இடம் தந்த இசக்கி சுப்பையா விலகல் வரை சென்றுவிட்டது. தங்க தமிழ்செல்வன் விலகலுக்கு பிறகு ஜெயில் பக்கம் போகாமலேயே தவிர்த்தார். என்ன பதில் சொல்வது என்று கையை பிசைந்த நேரம்தான், இசக்கி சுப்பையா விஷயமும் வெளியானது. இதையடுத்து நேற்று சிறையில் சென்று பார்த்துள்ளார். நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி உள்ளார் போலும்.

சசிகலா
சிறை வளாகமே அதிரபோகிறதோ என்று நினைத்து கொண்டிருந்தால், பெரிய அளவில் சசிகலா ரியாக்ஷன் காட்டவில்லை என தெரிகிறது. ஏனெனில் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலா தந்துள்ளார். இதில்சிலரது பெயர்களை தினகரனும் பரிந்துரை செய்துள்ளார். இந்த நிர்வாகிகள் பட்டியல் குறித்து ரெண்டு பேரும் நீண்ட நேரம் ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

புகழேந்தி
ஏற்கனவே பலமுறை தன் பேச்சை தினகரன் கேட்டு நடக்கவில்லை என்று சசிகலா வருத்தப்பட்டதாக தகவல்கள் வந்தன. இதை தவிர புகழேந்தி உள்ளிட்ட ஒருசிலர் நேரடியாக சென்று சந்திக்கும் போது வெளியில் நடக்கும் விஷயங்களை சசிகலாவிடம் சொல்வதால் அதன்மூலமாகவும் அவர் அப்செட் ஆனதாகவும் கூறப்பட்டது.

பிரச்சனையே இல்லை
அதனால் எப்படியும் இந்த முறை தினகரனுக்கு செம டோஸ் விழும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. சசிகலாவை சந்தித்து விட்டு வெளியில் வந்த தினகரனோ, "நிர்வாகிகள் விலகல் பற்றி உள்ளே அவரிடம் சொன்னேன்.. அதற்கு "ஜெயலலிதாவுடன் 30 வருஷம் இருந்திருக்கிறேன். அவரோட ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறேன். நிர்வாகிகள் விலகல் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை"ன்னு சொல்லிட்டார்" என்றார்.

அதிரடி மாற்றம்
இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலால் எப்படியும் அமமுகவில் பெரிய மாற்றம் வரும் என்று சொல்லப்பட்டாலும், தினகரன் நேற்று முன்தினம் என்ன கருத்து சொன்னாரோ, அதையேதான் சசிகலாவும் சொல்லி உள்ளார். ஒரு கட்சிக்கு பலமே நிர்வாகிகள்தான் என்றாலும், அவர்களின் விலகல் தலைமைக்கு பாதிப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தாதது ஏன் என தெரியவில்லை.

என்ன அர்த்தம்?
சசிகலா வேறு ஏதேனும் கணக்கில் உள்ளாரா? அல்லது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் ஏதாவது வைத்திருக்கிறாரா? என்றும் புரியவில்லை. இருந்தாலும் ஜெயிலுக்குள்ளே இருந்தே இப்படி ஒரு நிர்வாகிகள் பட்டியலை சசிகலா வெளியிடுகிறார் என்றால், ஆட்டத்தை வேறு ரூபத்தில் ஆரம்பிக்க போகிறார் என்றுதான் அர்த்தம் என்கிறது அரசியல் வட்டாரம்!












Click it and Unblock the Notifications