எல்லாம் அந்த 'முருகனின்' அருள், நல்லதே நடக்கும்.. தொண்டர்களின் உரிமைக்குரல் வெல்லும்.. சசிகலா ஆடியோ
சென்னை: சமீபத்தில் வெளியான சசிகலாவின் ஆடியோவில், அதிமுக எந்தவொரு தனி நபருக்கான கட்சி இல்லை என்றும் முருகனின் அருளால் கட்சியை மீண்டும் நல்லபடியாகக் கட்டமைத்து, ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று கூறுகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அறியப்படுபவர் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாகப் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த சசிகலா, ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
அதிமுகவின் அடுத்த முகமாக அறியப்பட்ட சசிகலா, சிறையிலிருந்த காலகட்டத்தில் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி, ஒ பன்னீர்செல்வம் தலைமைக்குக் கட்சி சென்றுவிட்டது.

சசிகலா
இந்தச் சூழலில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் வெளியே வந்த சசிகலா, தமிழ்நாடு அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பாராத வகையில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் சசிகலா. தினகரனின் அமமுக கட்சிக்கும் அவர் ஆதரவு கூட தெரிவிக்கவில்லை. இந்தத் தேர்தலில் அதிமுகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.

சசிகலா ஆடியோ
இதையடுத்து அதிமுகவை கைப்பற்றக் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார் சசிகலா. அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் தொடங்கி முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் வரை, சசிகலாவுடன் உரையாடும் ஆடியோ வெளியாகி வருகிறது. சசிகலாவுடன் பேசும் நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து நீக்கினாலும்கூட, சசிகலாவுடன் அதிமுகவினர் பேசுவது இப்போது நிற்பதாகத் தெரியவில்லை.

தனிநபருக்கான கட்சி இல்லை
இந்தச் சூழலில் நேற்று அதிமுக தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சசிகலா பேசுகையில், "அதிமுக எந்தவொரு தனி நபருக்கான கட்சி இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருந்து மாநிலத்திற்கு நல்லாட்சி கொடுத்தார். எண்ணற்ற உதவிகளையும் பொதுமக்களுக்குச் செய்தார்.

முருகன் அருள்
தொண்டர்கள் உறுதுணையாக இருந்தால் எதையும் என்னால் செய்ய முடியும். தொண்டர்கள் கவலைப்படாமல் இருந்தால் போதும். அவர்களின் மனக்குமுறல்கள் நன்றாகத் தெரிகிறது. அதிமுகவை மீண்டும் நல்லபடியாகக் கட்டமைத்து ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம். முருகன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்.

உரிமைக் குரல்
பெண் என்றாலே அவர்களுக்கு எதிராக அக்கிரமங்கள் நடக்கத்தான் செய்யும். ஜெயலலிதாவும்கூட இதையெல்லாம் கடந்து போராடித் தான் வெற்றி கண்டார். பெண்களுக்கு பொதுவாக வைராக்கியம் அதிகமாக இருக்கும். என்னால், இந்த நிலையைக் கடந்த துணிச்சலுடன் மீண்டு வரமுடியும். எப்போதும் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உரிமைக் குரல்தான் ஜெயிக்கும். அது நிச்சயம் நடக்கும்" என்று அவர் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications