ரூ 10 கோடி அபராதம் தானே.. அதெல்லாம் ஒரு மணி நேரத்தில் கட்டிடலாம்.. சசிகலா வழக்கறிஞர்
சென்னை : சசிகலா விடுதலை தொடர்பாக இம்மாத இறுதியில் தகவல் வரும் என வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் ரூ 10 கோடி அபராதத்தை ஒரு மணி நேரத்தில் செலுத்தி விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் வரும் ஜனவரி 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
ஆனாலும் அவரது நன்னடத்தை அடிப்படையில் இந்த மாத இறுதியில் விடுதலையாவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கைதி அதற்கான விண்ணப்பத்தை சிறைத் துறையிடம் அளிக்க வேண்டும்.
ஆனால் சசிகலா , இளவரசி, சுதாகரன் ஆகிய யாரும் இதுவரை அப்படி விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில் சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினால்தான் அவர் என்ன முன்கூட்டியே விடுதலை ஆக விரும்புகிறாரா, அல்லது ஜனவரி 27- வரை காத்திருக்கிறாரா என்பது தெரியவரும். இதற்காக கர்நாடகா சிறைத் துறையினரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
கர்நாடகா சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க இதுவரை யாரையும் அனுமதிக்கவில்லை என கூறிவிட்டனர். கொரோனாவால் மார்ச் மாதத்தில் இருந்து கைதிகள் யாரையும் பார்க்க முடியாத நிலை உள்ளது. எங்களை பொறுத்தவரை இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சிறைத் துறையினர் தகவல் கொடுப்பார்கள் என நம்புகிறோம் என ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
சசிகலாவுக்கான அபராத தொகை ரூ 10 கோடியை செலுத்துகிறீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு உடனே ஒரு மணி நேரத்தில் பணத்தை செலுத்தி விடுவோம் என ராஜா செந்தூரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.