அ.தி.மு.கவை கைப்பற்ற யாகம்..? "என் தலைமையில்தான் கட்சி இயங்கும்” - சசிகலா பரபரப்பு பேட்டி!
சென்னை: வருங்காலத்தில் அ.தி.மு.க எனது தலைமையில் இயங்கும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அ.ம.மு.க தலைவருமான வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.கவின் ஓராண்டு ஆட்சி சாதனையல்ல, வேதனை என்றும் நிலக்கரி விவகாரத்தில் முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துகளை கூறி வருவதாகவும் சசிகலா விமர்சித்துள்ளார்.
விளம்பரம் மட்டுமே நல்ல ஆட்சியை கொடுத்து விடாது எனவும் மக்களை திருப்தியாக வைத்திருக்க வேண்டும் எனவும் சசிகலா கூறியுள்ளார்.
ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்.. அசராமல் சொன்ன சசிகலா! திமுக ஆட்சியில் மனசு நிறையவில்லை என்றும் குட்டு
அ.தி.மு.கவுக்கு தலைமை ஏற்பேன்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் வி.கே.சசிகலா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட சசிகலா சித்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அ.தி.மு.கவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்தார். அ.தி.மு.கவிற்கு தலைமை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு நிச்சயமாக என பதிலளித்த சசிகலா, தொண்டர்கள் முடிவுதான் அ.தி.மு.கவில் எனவும் அடுத்த ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி என்றார்.
அ.தி.மு.கவை கைப்பற்ற யாகமா?
தற்போதைய யாகம் அ.தி.மு.கவை கைப்பற்றுவதற்கா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மறுத்த சசிகலா சித்தர்கள் பூஜையில் கலந்து கொள்ள மட்டுமே வந்ததாக தெரிவித்தார். புதிய இயக்கம் தொடங்கி ஓ.பி.எஸ் அதில் இணைய உள்ளதாக கூறப்படும் தகவலை மறுத்த சசிகலா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் என்னுடைய தொண்டர்கள் தான் என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அப்போதைக்கு நல்ல முடிவாக எடுக்கப்படும் என்றார். வரும் காலத்தில் அ.தி.மு.க எனது தலைமையில் இயங்கும் என்பதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் என்றார்.
ஓராண்டு தி.மு.க ஆட்சி
ஓராண்டு தி.மு.க ஆட்சி சாதனை என ஆட்சி செய்யும் முதல்வர் கூறி கொள்ளலாம் எனவும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்றார். மக்களை பொறுத்தவரையில் இந்த ஓராண்டு ஆட்சியில் திருப்தியாக இல்லை எனக் கூறினார். கடந்த ஓராண்டு ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாது கடவுளுக்கும் பிரச்சினை, கஷ்டம் என தெரிவித்தார். கோவில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல என்றார்.
அறநிலையத்துறை அமைச்சராக இருந்தால் மட்டும் போதாது எனவும் நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்றார். திராவிட மாடல் எனக்கூறி ஆட்சி நடத்திக்கொள்ளலாம். ஆனால் கோவில் நடைமுறைகளை அரசு மாற்றக்கூடாது என்றார்.
ஓராண்டு கால ஆட்சி என்பது சாதனையல்ல எனவும் வேதனை என்று தான் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாகவும் கூறினார்.
மாத்தி மாத்தி பேசுறாங்க
மேலும் நிலக்கரி தொடர்பாக முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக சசிகலா குற்றம்சாட்டினார். விளம்பரம் மட்டுமே நல்ல ஆட்சியை கொடுத்து விடாது எனவும் மக்களை திருப்தியாக வைத்திருக்க வேண்டும் எனவும் அனைத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும் என்றார்.
பெண்களுக்கு இலவச பேருந்து என அறிவித்தாலும், வேலைக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். குறைந்த கட்டணத்திலாவது சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்த சசிகலா அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.