சாயம் வெளுத்திருச்சு.. சசிகலா, ஓபிஎஸ், தினகரன் மூவரும் இணையலாம்.. ஆனால்.. விளாசிய ஜெயக்குமார்!
சென்னை : சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் வேண்டுமானால் ஒன்றாக இணையலாம், ஆனால் அவர்கள் அதிமுகவில் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு கை கோர்க்க இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் நிலவி வருகின்றன. அதுகுறித்துப் பேசியுள்ள முன்னாள் அமைச்சரும் ஈபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார், அவர்கள் அதிமுகவில் இணைய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிஞ்ச ரைடு எல்லாம்
சென்னை திருவிக நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எனது வீட்டில் ரெய்டு என்றார்கள். எனக்குத் தெரிந்த ரெயிடு எல்லாம் சைக்கிள் ரைடு, ஹார்ஸ் ரைடு, எலிஃபண்ட் ரைடு தான். மற்றபடி எந்த ரெய்டும் நடைபெறவில்லை.

பெண்களை ஏமாற்றும் திமுக அரசு
பெண்களுக்கான இலவச பேருந்தில் மற்ற மாநிலங்களில் புது பேருந்துகள் வாங்கித் தான் திட்டத்தைச் செயல்படுத்துவார்கள். ஆனால், இங்கு பழைய பேருந்துக்கு முன்புறம் மட்டும் பெயிண்ட் அடித்து விட்டிருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டினார். மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் இன்றளவும் ஒரு திட்டமாகத் தான் உள்ளது. பத்து சதவிகிதம் கூட பிங்க் பேருந்துகள் இயங்கவில்லை. பெண்களை திமுக அரசு ஏமாற்றுகிறது.

மூவரும் ஒன்றாக இணையலாம்
ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துவிட்டு டிடிவி.தினகரனை தனியாகச் சந்தித்துப் பேசினார். நரிகளின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. சசிகலாவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. நேற்று, இன்று, என்றைக்குமே சசிகலாவுடன் இணைய வாய்ப்பில்லை. டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் வேண்டுமானால் ஒன்றாக இணையலாம். ஆனால் அவர்கள் அதிமுகவில் இணைய முடியாது.

மக்களை காக்கும் எண்ணமே இல்லை
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கூட்டுப் பலாத்காரம் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது துக்ளக் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. போதைப் பொருட்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் காவல்துறையை ஏவி வருகிறது. மக்களைக் காக்கும் எண்ணம் இந்த அரசிடம் முற்றிலுமாக இல்லை." எனக் குற்றம்சாட்டினார்.

ரஜினி அரசியல்
மேலும், நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயக்குமார், அரசியல் இல்லாத உலகமே கிடையாது. அவர் என்ன மாதிரியான அரசியல் பேசினார் என ரஜினியிடம் கேளுங்கள் என்றார். மேலும், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழகத்தை செதுக்கிய சிற்பிகள், அவர்களை தவிர்க்க முடியாதவர்கள்.

அப்பா படத்தை வைப்பதற்காக
அதன் அடிப்படையில்தான் அவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இன்னும் கூட பல முதலமைச்சர்கள் தமிழகத்தில் பொறுப்பு வகித்துள்ளனர். ஆனால் அவர்களது புகைப்படம் ஏன் வைக்கப்படவில்லை? தனது அப்பாவின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை வைத்தது போன்று தான் உள்ளது. அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications