போயஸ்கார்டன் சென்ற சசிகலா... வேதா நிலைய வாசலில் விநாயகர் தரிசனம் - கண் முன் வந்த பழைய நினைவுகள்
நீண் நாட்களுக்குப் பிறகு போயஸ்கார்டன் சென்ற சசிகலா அங்குள்ள விநாயகர், சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சசிகலா நீண்ட நாட்களுக்குப் பிறகு போயஸ்கார்டன் சென்று அங்குள்ள விநாயகரையும், சிவபெருமானையும் தரிசனம் செய்துள்ளார். வேதா நிலையத்தின் வாசல் அருகே சசிகலாவின் கார் சென்ற போது பழைய நினைவுகள் கண் முன் வந்து சென்றுள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் சசிகலாவிற்கு வேதா நிலையம்தான் இருப்பிடம். ஜெயலலிதா மறைந்த பிறகும் தனியாக வேதா நிலையத்தில் வாழ்ந்து வந்த சசிகலாவை அவரது உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் வந்து சந்தித்து சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்ட சசிகலா முதல்வராகவும் ஆசைப்பட்டார். ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்த வாயால் சின்னம்மா என்று அழைத்தனர்.
சென்னை வந்த சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை கிடைக்கவே பெங்களுரூ சிறைக்கு சென்றார் சசிகலா. நான்கு ஆண்டு கால தண்டனை முடிந்து கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை வந்தார் சசிகலா. அவர் வருவதற்கு முன்பாகவே ஜெயலலிதா வாழ்ந்த வேதாநிலையம் வீடு அரசுடமையாக்கப்பட்டு விட்டது.
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி
சென்னை வந்த சசிகலா தி. நகரில் உள்ள கிருஷ்ணபிரியாவின் வீட்டிற்கு சென்றார். பத்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டார். ஜெயலலிதா பிறந்தநாளில் வேதாநிலையம் வீட்டிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
சசிகலா வழிபாடு
கடந்த வாரம் தஞ்சாவூரில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்ட சசிகலா திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் யாகம் செய்து வழிபட்டார். கடந்த 19ஆம் தேதியன்று சென்னை திரும்பிய சசிகலா இன்று திடீரென்று போயஸ்கார்டனுக்கு சென்றார்.
போயஸ்கார்டன் வருகை
தி.நகரில் இருந்து இன்று காலை ஆறரை மணிக்கே போயஸ் கார்டன் சென்றார் சசிகலா. அங்குள்ள விநாயகர் கோயிலில் தரிசனம் செய்தார். ஜெயலலிதாவுடன் தான் வாழ்ந்த வேதாநிலையம் வீட்டு வாசல் வழியாக சென்றார். வாசலை கடந்த போதே பழைய நினைவுகள் கண் முன் வந்து சென்றது சசிகலாவிற்கு. வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டதற்கு பிறகு அங்கு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்பதால் வீட்டிற்குள் சசிகலா செல்லவில்லை.
புது பங்களா
வேதா நிலையம் வீட்டைப் பார்த்தபடி பின் பக்கம் வந்த சசிகலா அங்கிருந்த சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சசிகலா வசிக்கப் போகும் புது பங்களாவும் கட்டப்பட்டு வருகிறது. பங்களாவை வெளியிலிருந்தபடியே பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் சசிகலா.
நிம்மதி கிடைக்குமா
அரசியலை விட்டு ஒதுங்கி விட்டதாக கூறும் சசிகலா, 30 ஆண்டு காலம் சசிகலா வாழ்ந்த போயஸ்கார்டன் பகுதியிலேயே மீண்டும் வசிக்கப்போகிறார். உறவுகளால் மனம் நொந்து போயிருக்கும் சசிகலா இனி விரும்புவது நிம்மதியை மட்டும்தான். அவர் விரும்பும் நிம்மதியை அந்த பங்களா கொடுக்குமா பார்க்கலாம்.