சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம் கிரகப்பிரவேசம்- ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லம் பங்களாவுக்கு எதிராக சசிகலா கட்டிய புதிய இல்லத்தின் கிரகப்பிரவேச நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதில் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் சசிகலா. 2020-ம் ஆண்டு சசிகலா விடுதலையானது முதல் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால் ஒவ்வொரு பேட்டியிலும் அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என தொடர்ந்து கூறி வந்தார் சசிகலா.

இந்த நிலையில் சசிகலாவின் நடவடிக்கைகள் தற்போது திடீரென வேகமெடுத்திருக்கின்றன. அண்மையில் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு சசிகலா சென்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து கொடநாடு பங்களாவுக்கு சென்றார் சசிகலா. அங்கு ஜெயலலிதாவின் உருவ சிலையுடன் கூடிய நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். அப்போது ஜெயலலிதா குறித்து மிக மிக உருக்கமாக கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார் சசிகலா.
ஜெயலலிதா மறைவுக்கு பின் 7 ஆண்டுகளில் முதல் முறையாக திடீரென கொடநாடு எஸ்டேட் செல்லும் சசிகலா!
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை போயஸ் கார்டனில் சசிகலா கட்டியிருக்கும் புதிய பங்களாவுக்கான கிரகப் பிரவேசம் நடைபெற்றது. இந்த பங்களா, ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு நேர் எதிராகவே கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லம், நீதிமன்ற உத்தரவுப்படி அவரது அண்ணன் குடும்பத்தினராகிய தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவும் சென்னை தியாகராயர் நகரில் உள்ள அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில்தான் இதுவரை தங்கி இருந்தார். அதே நேரத்தில் போயஸ் கார்டனில் வேதா இல்லத்துக்கு எதிரே சசிகலாவின் புதிய பங்களா கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வந்தன.

தற்போது சசிகலாவின் புதிய பங்களாவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இன்று காலை கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இதில் சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். முன்னதாக அருகே உள்ள விநாயகர் கோவிலில் சசிகலா வழிபாடு நடத்தினார். இந்த வீட்டில் குடியேறும் சசிகலா இனி அரசியல் ஆட்டங்களை அதிரடியாக தொடங்குவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் சசிகலாவின் நடவடிக்கைகளை அதிமுக தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications