பொங்கல் பண்டிகை அன்று எஸ்.பி.ஐ தேர்வு..தமிழர்களின் வேலைவாய்ப்பினை பறித்திடும் செயல் - கனிமொழி எம்.பி
சென்னை: பொங்கல் பண்டிகை அன்று பாரத ஸ்டேட் வங்கியின் கிளர்க் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு நடத்துவது நியாயமற்றது என்று சாடியுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, தமிழர்களின் வேலை வாய்ப்பினை பறித்திடும் செயல் இது எனவும் விமர்சித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5,008 பணியிடங்களுக்கான ஸ்டேட் வங்கியின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 15ஆம் தேதி முதன்மை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று ஸ்டேட் பாங்க் கிளார்க் பணி தேர்வு! தேதியை மாற்ற சு.வெங்கடேசன் குரல்!
பொங்கல் பண்டிகையன்று தேர்வு
வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருப்பது
தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும். அதுபோக பொங்கல் பண்டிகையை கொண்டாட இளைஞர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கொண்டாடும் மனநிலையில் அனைவரும் இருப்பதால் தேர்வு எழுதுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும்.
பல்வேறு தரப்பினரும் கோரிக்கை
இதனால் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மைத் தேர்வை நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பொங்கல் திருநாளன்று நடத்தப்பட இருக்கும் எஸ்பிஐ தேர்வுத் தேதியை மாற்ற வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இதுவரை தேர்வு தேதி மாற்றப்படவில்லை.
தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனை
பொங்கல் அன்று எஸ்பிஐ வங்கி கிளார்க் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வுத் தேதியை மாற்ற வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்டேட் வங்கி சென்னை வட்டாரத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், "தமிழ்நாட்டின் குரலை வஞ்சிப்பது தமிழ்நாடு பெயர் குறிப்பிடுவதை தவிர்ப்பது, தமிழ்நாட்டின் இலட்சினையை மறுப்பது தேர்தல் நடக்கின்ற மையங்கள் முழுக்க எஸ்பிஐ வங்கியின் ஊழியர்கள் தேர்வு பணியாளர்களாக பயன்படுத்த வேண்டும் இப்படியாக தேர்வர்கள் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல தமிழர்களின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனை.
கனிமொழி எம்.பி விமர்சனம்
இதுவே விநாயகர் சதுர்த்தி அன்று இதுபோல தேர்வு வைப்பார்களா? தமிழர் விரோதப் போக்குடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று தேர்வு வைத்து திருநாளை கொண்டாட முடியாதது போல் ஒன்றிய அரசு செயல்படுகின்றது. தேர்தல் தேதியை மாற்றும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்" எனக் கூறினார். இதனிடையே, பொங்கல் பண்டிகை அன்று எஸ்.பி.ஐ வங்கி எழுத்தர் பணிகளுக்கான முதன்மை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நியாயமற்றது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.