இணைந்து செயல்பட 'நோ சான்ஸ்'.. "அதே மேட்டர்".. தீர்ப்பும் அதே தான் வரும்.. உற்சாகத்தில் ஈபிஎஸ் டீம்!
சென்னை : இருவரும் இணைந்து செயல்பட முடியாத சூழலில், ஒரு கட்சியை தொடர்ந்து நடத்துவது என்பது இயலாது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உணர்ந்திருக்கிறார்கள். உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் உத்தரவைப் போலவே உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளிக்கும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வில் நடைபெற்ற விசாரணையின்போது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட முடியாத சூழலில், கட்சி செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உத்தரவு கிடைத்தது.
தற்போது உச்ச நீதிமன்றத்திலும், நீதிபதிகள், அதுகுறித்த கேள்விகளை எழுப்பி இருப்பதால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பே வரும் என நம்பிக்கையாகச் சொல்கிறது ஈபிஎஸ் தரப்பு.
இப்படியே போனா கட்சியை எப்படி நடத்துவீங்க? சட்டென கேட்ட சுப்ரீம் கோர்ட்.. திகைத்த ஓபிஎஸ், ஈபிஎஸ்!
இறுதிகட்ட விசாரணை
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதிமுக தலைமைக் கழகம், அவைத் தலைவர் தரப்பு வாதங்கள் இன்று கேட்கப்பட்டன.
பதில் வாதம்
அப்போது, உரிய நடைமுறைகளை பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது, அதனால்தான் உயர் நீதிமன்றமும் ஏற்று உத்தரவு பிறப்பித்தது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர், பொதுக்குழு முடிவை எதிர்ப்பது அடிப்படையற்றது. தனக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை என அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பு வாதிட்டது. இதற்கு பதில் வாதம் அளித்த ஓபிஎஸ் தரப்பு, அதிமுகவில் இரட்டை பதவிகளை உருவாக்க வேண்டும் என கூறியதே ஈபிஎஸ் தான், இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது. ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நோட்டிஸில் இல்லாத தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன என வாதிட்டது.
நீதிபதிகள்
அனைத்து தரப்பு வாதங்களும் இன்றோடு நிறைவடைந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான சட்ட விதிகளில் தெளிவான புரிதல் இல்லை, கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதை தொடர்ந்து நீதிமன்றங்கள் கண்காணிக்க முடியாது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டே இருந்தால் கட்சியை எப்படி நிர்வகிப்பீர்கள்? யார் பக்கம் தவறு, சரி என்பதை நாங்கள் முடிவு செய்ய தேவையில்லை, இடைக்காலத் தீர்வு வழங்கப்பட்டாலும் நீண்டகால செயல்பாட்டிற்கு என்ன தீர்வு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜன் செல்லப்பா
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராஜன் செல்லப்பா, "இருவரும் இணைந்து செயல்பட முடியாத சூழலில், ஒரு கட்சியை தொடர்ந்து நடத்துவது என்பது இயலாது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உணர்ந்திருக்கிறார்கள். இருவரில் யாருக்கு பொறுப்பு அதிகம், யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதெல்லாம் ஒரு வாதமாக இருந்தாலும், ஆதாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமியே அதில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைக்கும் முயற்சியில் தோற்றுப் போயிருக்கிறார். எனவே, கட்சியை வழிநடத்த யார் தகுதியானவர் என்பதுதான் கேள்வி.
இருவரும் செயல்பட முடியாத சூழலில்
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் தொண்டர்கள் முடிவெடுப்பார்கள் என்பதுதான் விதி. ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தொண்டர்கள் எப்போதாவது வாக்களித்தார்களா? நடைமுறையில் ஒரு தகுதியான ஆளுமை ஒருவர் வரும்போது போட்டி வருவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படித்தான் எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், விதண்டாவாதத்திற்காக எதிர்த்து நிற்கிறார்கள். நீதிபதிகள் நல்ல முடிவெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் சொன்னதைப் போலவே உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளிக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.