சேட்டிலைட் போனா? எங்க கிட்டயா? வரலாற்று பிழையாகிடும்.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த நெல்லை முபாரக்!
சென்னை : பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஆதாரமில்லாமல் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து வருகிறது, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவில்லை என்றால் வரலாற்று பிழையாக மாறும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக,ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு சில அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நெல்லை முபாரக்
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஆதாரமில்லாமல் எஸ்.டி. பி.ஐ நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து வருகிறது, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவில்லை என்றால் வரலாற்று பிழையாக மாறும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.சென்னை மண்ணடியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்," சில தினங்களுக்கு முன்னாள் NIA நடத்திய சோதனையில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சார்ந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.

பொய் தகவல்கள்
இதுவரை அவரை எதற்காக கைது செய்தோம் என NIA தெரிவிக்கவில்லை,FIR வழங்கவில்லை தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத நபர் உலகம் முழுவதும் தொடர்பு வைத்திருந்தார் என பொய் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அவரது வீட்டில் எந்த ஒரு பொருளும் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கையொப்பம் பெறாத நிலையில் சேட்டிலைட் செல்போன் வைத்திருந்தார் என பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்

பெட்ரோல் குண்டு
மேலும் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் எந்த ஒரு தொடர்பும் இல்லாத கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது, எஸ்.டி.பி.ஐ கட்சியை பொறுத்தவரை ஒருபோதும் வன்முறைக்கு செல்லாத ஒரு கட்சி. சமூக நீதி குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் கட்சி. NIA விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்வாகியை கூட சட்டபூர்வமாக போராடி வரும் நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது குண்டு வீசும் அவசியம் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தமிழக காவல்துறை ஏன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வரலாற்று பிழை
பாஜகவின் மிரட்டல் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. உடனடியாக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றால் இது ஒரு வரலாற்று பிழையாக மாறும் தவறு செய்த நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் பாஜகவின் அழுத்தத்திற்கு உள்ளாகி கைது செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. மேலும் தங்கள் வீட்டில் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசிய வரலாறு இந்து முன்னணி நிர்வாகிகள் மீது இருக்கும் நிலையில் அவர்களிடம் ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை இது. தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் டி.ஜி.பி - ஐ மாலை சந்திக்க உள்ளேன்' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications