முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை.. நீண்டகால பரோல் விவகாரம்.. தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை
சென்னை: 21 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மீண்டும் நீண்டகால பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். விசாரணையின் போது மாண்புமிகு நீதிபதிகள், "நீண்டகால பரோல் மற்றும் முன்விடுதலை தொடர்பான முடிவுகளை தமிழக அரசே எடுக்க வேண்டும்" என்று தெளிவாகக் கூறி, மனுக்களை நிராகரித்தனர். இதனால் இந்த 21 சிறைவாசிகளும் மீண்டும் சிறைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழக அரசு உடனடித் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "தமிழக சிறைகளில் 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் முன்கூட்டியே விடுவிப்பது என்பது முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதுவரை சிலர் முன்விடுதலை பெற்றிருந்தாலும், பலர் நீதிமன்ற அனுமதியுடன் நீண்டகால பரோல் விடுப்பில் இருந்து வருகின்றனர்.

தற்போது அவர்களது பரோல் காலாவதியாகியுள்ள நிலையில், 21 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மீண்டும் நீண்டகால பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். விசாரணையின் போது மாண்புமிகு நீதிபதிகள், "நீண்டகால பரோல் மற்றும் முன்விடுதலை தொடர்பான முடிவுகளை தமிழக அரசே எடுக்க வேண்டும்" என்று தெளிவாகக் கூறி, மனுக்களை நிராகரித்தனர். இதனால் இந்த 21 சிறைவாசிகளும் மீண்டும் சிறைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசு பரீசீலிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளதால், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கருணை அடிப்படையில் அவர்களை முன்விடுதலை செய்யும் நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். முன்னதாக அவர்களை நீண்டநாள் பரோல் விடுப்பு வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உயர் நீதிமன்றமே உத்தரவு மூலமாக அரசுக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கும் நிலையில், தமிழக அரசு உடனடியாகவும் தயக்கமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைவிடுப்பில் இருந்த இந்த சிறைவாசிகள், புதிய வாழ்க்கையைத் தொடங்கி, தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்து, சமூகத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ முயற்சித்து வந்தனர். முன்கூட்டிய விடுதலைக்காக ஆவலுடன் காத்திருந்தவர்களை, அரசின் தொடர்ச்சியான தாமதங்கள் மீண்டும் சிறைக்குத் திருப்பி அனுப்பியுள்ளன. இது சிறைவாசிகளையும் அவர்களது குடும்பங்களையும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருந்தவர்கள், இந்த நிச்சயமற்ற நிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, தமிழக அரசு இந்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான நடவடிக்கைகளை உடனடியாகத் துரிதப்படுத்த வேண்டும். மற்ற ஆயுள் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் முன்விடுதலை வாய்ப்புகள், பாரபட்சமின்றி இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பேரறிவாளன் விவகாரத்தில் அவர் விடுதலை பெறும் வரையில் அவருக்கு வழங்கப்பட்ட நீண்டநாள் பரோல் விடுப்பை போன்று இவர்களுக்கும் பரோல் விடுப்பு வழங்கிட வேண்டும். நீதி மற்றும் மனிதாபிமான அணுகுமுறையுடன் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விசயத்தில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தலைமைச் செயலர் அவர்களுக்கும் மனு அனுப்பியுள்ளேன். முஸ்லிம் சமூகத்தின் நெடுநாள் எதிர்பார்ப்பையும் மனிதாபிமானக் கோரிக்கையையும் நிறைவேற்றிட தமிழக அரசு உடனடித் துரித நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இந்த சிறைவாசிகளின் விடுதலை, அவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், நீதியின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications