டாஸ்மாக் பார்களை மூடுக! வருவாய்க்கு மாற்றுத் திட்டங்களை உருவாக்குக! அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!
சென்னை: டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பார்களை மூடிவிட்டு வருவாய்க்கு மாற்றுத்திட்டங்களை வகுக்க வேண்டும் என அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது;

எதிர்க்கட்சிகள் தோல்வி
''5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாததற்கு இ.வி.எம். மெஷின் மட்டுமே முழு காரணம் என ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டி ஒதுங்கிவிட முடியாது. நாட்டில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தெளிவான தேர்தல் உத்திகளை திட்டமிமிடுவதில் எதிர்கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளன. மூர்க்கத்தனமாக வளர்ந்து வரும் பாசிசத்தை அடக்கி, அழிப்பதற்கான எந்த செயல்திட்டமும் மதச்சார்பற்ற கட்சிகளிடம் இல்லை.''

7 பேர் விடுதலை
''முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவு மூலம் சிறைக்கைதிகள் விடுதலை, ஜாமீன் விவகாரத்தில் மாநில அரசுக்கே உரிமை உள்ளது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.''

ஆயுள் சிறைவாசிகள்
''ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லாத சூழலில், முழுக்க முழுக்க அது தமிழக அரசின் கைகளின் மட்டுமே உள்ள விஷயமாகும் என்பதால், கடந்த காலங்களைப் போல் இல்லாமல், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும், 7 தமிழர்களுக்கும் விடுதலையை தமிழக அரசு சாத்தியமாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.''

டாஸ்மாக் பார்
''டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதி இல்லை எனவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று தமிழக அரசு உடனடியாக அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.''

மாற்றுத்திட்டம்
''டாஸ்மாக் மூலம் மேற்கொள்ளப்படும் மது விற்பனை அரசுக்கு வருமானமாக இருந்தாலும் மறுபுறம் லட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதன் காரணமாக வறுமை, தற்கொலை, கொலைகள், பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. தமிழக அரசு வருவாய்க்கான மாற்றுத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முன்வருவதோடு, மது பார்களை மூடும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.''












Click it and Unblock the Notifications