கமல் இன்னும் திருந்தல.. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ மூலம் முஸ்லிம்கள் மீது விஷம் -உமர் பாரூக் காட்டம்
சென்னை: விஸ்வரூபம் படத்தின் மூலம் கமல் படிப்பினை பெறாமல் அமரன் படத்தின் மூலம் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷம் கக்கி வருகிறார் என்று குற்றம்சாட்டி இருக்கிறார் எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக்.
இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அவர், "திட்டமிட்டு பரப்பப்படும் தீவிரவாத முத்திரைப்படங்கள். விஸ்வரூபம் படம் மூலம் கமல் படிப்பினை பெறவில்லை போல் தெரிகிறது. மீண்டும் முஸ்லிம்களை காயப்படுத்தும் வகையில் கமலின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் "அமரன்" திரைப்படமும் விஷம் கக்குவதாக தகவல்கள் வருகின்றன. அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உறுதியா முஸ்லிம்கள் பக்கம் நின்றார்.

அதுபோல் இன்றைய முதல்வரும் முஸ்லிம்களின் பக்கம் நின்று கமலின் அமரன் மற்றும் ரசாக்கர் போன்ற விஷமத்தை விதைக்கும் படங்களை தடை செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற விஷமக் கருத்துக்களை ஏற்கமுடியாது. மீறி வெளியானால் மக்களின் உணர்வுகளை தடுக்கவும் முடியாது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக கவனம் செலுத்தவேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக் குழு கூட்டத்திலும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதில், "முஸ்லிம் வெறுப்பை விதைக்கும் அமரன், ரஸாக்கர் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்:
இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், முஸ்லிம் சமூகத்தை குற்றப்படுத்தும் வகையிலும், அவர்களை இந்து சமூகத்தவர்களுக்கு எதிரானவர்களாகவும், தேசத்திற்கு எதிரானவர்களாகவும் காட்டும் வகையில், பொய்யையும், அவதூறையும் கலந்து திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா, கேரளா ஸ்டோரி வரிசையில், தற்போது கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் என்கிற படமும், பாபி சிம்ஹா நடிப்பில் ரஸாகர் என்கிற படமும் வெளிவர இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் பெரும் விவாதமாகி வருகின்றன. முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த தவறான பார்வையை வேண்டுமென்றே வெளியிடுவது, அவர்களின் தேசப்பற்றை கேள்விக்குட்படுத்துவது, முஸ்லிம்கள் குறித்து பொது சமூகத்திடம் அச்சத்தை விதைப்பது, வரலாறு என்கிற பெயரில் புனைவுகள் மூலம் முஸ்லிம் வெறுப்பை விதைப்பது போன்றவை இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, கமல்ஹாசன் அவர்களின் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த காரணத்தால், முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து அப்போதைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் அந்த திரைப்படம் வெளிவர தடைவிதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் வகையில் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் அமரன் என்கிற படம் தயாரிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. ஆகவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்த விசயத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் போன்று, முஸ்லிம் வெறுப்பு திரைப்படமான அமரன் மற்றும் ரஸாகர் திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற திரைப்படங்கள் சங்பரிவார்கள் முன்னெடுக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலுசேர்க்கவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சமூகங்களுக்கிடையே வன்மத்தை, மதமோதலை உருவாகவும், அமைதியை சீர்குலைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏராளமாக உள்ளபோதும், அதுபற்றி பேசாமல் அவதூறை பரப்பி, அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரை படங்கள் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இந்த திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு தவறும் பட்சத்தில் இந்த திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சி போராடும் என்பதையும் இந்த செயலகக் குழு கூட்டம் தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications