ஏன் படபடப்பு.. எடப்பாடியை எஸ்டிபிஐ தலைவர்கள் சந்தித்தது ஏன்? தேர்தல் கூட்டணியா -உமர் பாரூக் விளக்கம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்டிபிஐ தலைவர்கள் நேரில் சந்தித்ததற்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது குறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் விளக்கம் அளித்து உள்ளார்.
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் நேற்று மாலை சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய முடிவுக்கு எஸ்டிபிஐ நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு சிறைகளில் உள்ள நீண்டநாள் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, அந்த கோரிக்கைக்கு வலுசேர்த்ததற்காக அதிமுகவுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையான, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை நிறைவேறும் வகையில், அதிமுக தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி ஆதரவு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்." என்று குறிப்பிடபட்டு உள்ளது.
இதுகுறித்து எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் பேஸ்புக்கில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "ஒரு சந்திப்பு ஒராயிரம் விமர்சனங்கள் இது எதிர்பார்த்ததுதான் எனவே கடந்துபோவோம் என்றில்லாமல் கவனத்திற்கு சில. அஇஅதிமுக பாஜகவை உதறியவுடன் நாம் பதறி ஓடி சந்திக்கவில்லை. நிதானித்தோம். காத்திருந்தோம். அங்கிருந்து பல மாவட்டச் செயலாளர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் இனி பாஜகவுடன் உறவு இல்லை என்பதை உறுதிபட சொன்ன வண்ணம் இருந்தனர். அப்போதும் அவசரம் காட்டவில்லை.
ஆனால் முழு இந்தியாவில் துடைத்தெரியப்பட வேண்டிய ஒன்றை துணிவுடன் உதறியதை பாராட்டத்தானே வேண்டும் சிக்கிவிட்டார்கள். இனி மீளவே முடியாது. என்றெல்லாம் பேசப்பட்ட நேரத்தில் யாரும் எதிர்பாராத திருப்பமாக இனி உறவு இல்லை என்பதை உறுதியோடு கூறும் நிலையில் பாஜக எதிர்ப்பில் தடம் மாறாத நாம் எதிர்க்கவே மாட்டார்கள் என்று கூறப்பட்ட அஇஅதிமுக, பின் விளைவுகளை கண்டு அஞ்சாமல் துணிந்து முடிவெடுத்திருப்பதை பாராட்டத்தானே வேண்டும் அதிலும் குறிப்பாக யார்?
அது ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ நன்மை செய்தால் பாராட்டுவதும், தீமை செய்தால் எதிர்ப்பதும் தனது கொள்கையாக கொண்ட எஸ்டிபிஐ கட்சி யாருடைய தயவிலும் கட்சி நடத்தாத நிலையில் சுயமாமா இயங்குவதால் சரியை சரி என்கிறோம், தவறை தவறு என்கிறோம் அவ்வளவுதான் ஒரு வாழ்த்துக்கும், நன்றிக்குமே இத்துனை படபடப்பு தேவை இல்லையே இன்னமும் காலம் இருக்கிறது. களம் மாற வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் காத்திருங்கள் எல்லாவற்றையும் இப்போதே கொட்டிவிட வேண்டாமே." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications