முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்!
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்திருந்தாலும், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவு எட்டப்படாததால் இழுபறி நிலை நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற இலக்குடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தொகுதி பங்கீடு எளிதாக முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பாஜக தரப்பில் பல வெற்றி வாய்ப்பு உள்ள முக்கிய தொகுதிகளை கோரிய நிலையி, அதிமுக அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இதனால் பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நீண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மயிலாப்பூர், மொடக்குறிச்சி, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, மதுரை தெற்கு, திருச்செந்தூர், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 27 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் தான், அண்ணாமலை போட்டியிடும் தொகுதி குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகளை குறிவைத்து அண்ணாமலை தரப்பு முன்கூட்டியே பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கோவை தெற்கு தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனால் அண்ணாமலை எதிர்பார்த்த சில தொகுதிகள் இறுதி பட்டியலில் இடம்பெறாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பாஜக மைய நிர்வாக குழ கூட்டம் சென்னை நகரில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கூட்டத்தில் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசும்போது, தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டியிருந்தது என்றும், அதற்கான முயற்சிகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அண்ணாமலை கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சில தொகுதிகளை மாற்றுவது குறித்து கூட்டணித் தலைமையான அதிமுகவுடன் மீண்டும் பேசுவதாக மத்திய அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தொகுதிகளை மாற்றுவதற்கு அதிமுக தரப்பில் முழுமையான ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் நெருங்கி வரும் நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதமாகி வருவது பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications