தாலிக்கு தங்கமும் சாதனைதான்.. டாஸ்மாக்கால் பெண்கள் தாலியை இழக்க வச்சதும் சாதனைதான்- சீமான்
சென்னை: தமிழகத்தில் தாலிக்குத் தங்கம் கொடுத்தது சாதனை என்றால் மக்களை குடிக்க வைத்து 2 லட்சம் பெண்கள் தாலியை இழக்க வைத்தது தமிழக அரசின் சாதனைதான் என பனப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. 117 ஆண், 117 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார் சீமான். தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் சோளிங்கர் சட்டசபைத் தொகுதி வேட்பாளர் பாவேந்தரை ஆதரித்து பனப்பாக்கம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார் சீமான்.

கடவுள்
அப்போது திறந்த வேனிலிருந்து ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் தமிழகத்தில் விவசாய வேலை அரசு வேலையாக அறிவிக்கப்படும். இந்துக்களின் கடவுளான கிருஷ்ணர், இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம், கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசுபிரான் என அனைவரும் ஆடுமாடுகள் மேய்த்தவர்கள்தான்.

25 ஆயிரம் கோடி
அப்போது ஏன் நீங்கள் எல்லாம் ஆடு, மாடு மேய்க்கக் கூடாது. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. தமிழகத்தில் மாடுகள் மூலமாக பால் விற்பனையில் 3 லட்சம் கோடி வருவாய் இருக்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்கிறது.

டாஸ்மாக் கடைகள்
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தெருவுக்கும் 2 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. தமிழகத்தில் தாலிக்கு தங்கம் கொடுப்பது சாதனை என்றாலும் டாஸ்மாக் கடை மூலம் 2 லட்சம் பெண்களின் தாலியை இழக்க செய்ததும் தமிழக அரசின் சாதனைதான் என சரமாரியாக குற்றம்சாட்டினார் சீமான்.

சீமான் போட்டி
நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து சீமான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது நடைபெறும் தேர்தலில் அவர் திருவொற்றியூர் தேர்தலில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications