திருச்சி விமான நிலைய மோதல் நினைவிருக்கா? மதிமுகவுடன் சமரசமான நாம் தமிழர்.. சீமான் விடுதலை
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் - நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கிலிருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வரவேற்பு அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் அக்கட்சியினர் திரளாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் திருச்சி விமான நிலையம் வருவதால் அவரை வரவேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
அருகருகே நின்ற இரு கட்சி தொண்டர்களும் தங்கள் தலைவர்களை வரவேற்பதில் போட்டி போட்டபோது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமானை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இரு தரப்பினரும் சமரச உடன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications