சீமானின் 'தென்மண்டல' தளபதி வெற்றிக்குமரன் நாம் தமிழர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்? 'லெட்டர்' உண்மையா?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் சீமானின் தென்மண்டல தளபதியாக வலம் வந்தவருமான வெற்றிக்குமரன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை சமூக வலைதளங்களில் பதிவாகவில்லை.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் எந்த ஒரு செய்தியாளர் சந்திப்பானாலும் சில மாதங்களுக்கு முன்பு அன்பு தென்னரசன், வெற்றிக்குமரன் இருவரும் நின்று கொண்டிருப்பர் அல்லது அமர்ந்து கொண்டிருப்பர். ஆனால் சில மாதங்களாக வெற்றிக்குமரன் சீமானுடன் இணைந்து செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, வெற்றிக்குமரன் சீமானுடன் இருப்பதாகவே பதிலளித்து வந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று காவிரி பிரச்சனைக்கான போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து செப்.27-ல் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த வெற்றிக்குமரன், காவிரி நீர் உரிமைக்காக எதிர்வரும் செப்டம்பர்

30 ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது உறவுகளை களத்தில் சந்திப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

பின்னர் நேற்று "காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்க மதுரையில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உணர்வுள்ள தமிழர் ஒன்றாய் இணைவோம்" என்ற பதிவுடன் வீடியோ மூலமாகவும் அழைப்பு விடுத்திருந்தார் வெற்றிக்குமரன்.

இந்நிலையில் கடந்த பல மணிநேரமாக வெற்றிக்குமரன், நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பெயரிலான கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெற்றிக்குமரனின் பக்கத்திலும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் தற்போது வரை நாம் தமிழர் கட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இந்த கடிதத்தின் உண்மை தன்மை குறித்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications