பிராமணர்களை விடுங்க.. 7 பொதுத்தொகுதிகளில் பட்டியலின வேட்பாளர்கள்.. கவனம்பெற்ற சீமானின் நாம் தமிழர்
சென்னை: சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பொதுவாக பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு தனி தொகுதியில் தான் போட்டியிட தான் வாய்ப்பு வழங்கப்படும். பொதுத்தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்படாது என்று பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்பட பல கட்சிகள் மீது இன்றுவரை தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படியான சூழலில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் 7 பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மொத்தம் 6 தொகுதிகளில் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் விவரத்தை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பொதுத்தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள பட்டியிலின வேட்பாளர்களின் விவரங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சாட்டை துரைமுருகன் தனது வீடியோவில் கூறியுள்ளதாவது:
''ஐயர்களுக்கு 6 இடங்கள் கொடுத்துள்ளோம் என்று விமர்சனம் செய்வோர் யாரும் வண்ணார், ஆசாரி, குயவர், மருத்துவ சமுதாயத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பற்றி பேச மறுக்கின்றனர்.
ஐயர்களுக்கு சீட் வழங்கியது மட்டும் தான் அவர்களின் கண்களுக்கு தெரிகிறது. 7 பொது தொகுதிகளில் பட்டியலின வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நீங்கள் எல்லாம் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படலாமா? என்று கேட்ட தலைவருக்கு மத்தியில் 7 பொதுத்தொகுதியில் பட்டியலினத்தவர்களை களமிறக்கி இருக்கிறோம்.
இதில் 4 தொகுதிகளில் பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், 2 இடங்களில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், ஒரு இடத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்'' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234ல் 46 தனி தொகுதிகள் உள்ளன. இதில் 44 சட்டசபை தொகுதிகள் தலித் மக்களுக்கும், 2 சட்டசபை தொகுதிகள் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் இந்த தொகுதிகள் தான் தலித், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு அரசியல் கட்சியினர் வழங்கி வருகின்றன. இதற்கிடையே தான் நாம் தமிழர் கட்சி தனித்தொகுதிகளை தாண்டி பொதுத்தொகுதிகளிலும் சீட் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இடையே போட்டி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும்படி விஜய் அழைப்பு விடுத்தார். ஆனால் தற்போது வரை எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. அதேவேளையில் வழக்கம்போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து 234 சட்டசபை வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications