கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம் இல்லை! தமிழக அரசின் சின்னம்! என்னா தவறு? சேகர்பாபு கேள்வி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியை மக்கள் கடவுளாக பார்ப்பதால் அவரது நினைவிடத்தில் கோபுரம் அமைப்பது தவறில்லை என்றும் அது அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்தான் என்றும் அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
சமாதியில் கோயில் போன்று அலங்காரம் செய்து இந்து மக்களின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியின் சுகாதார நிலைகுழு தலைவர் சாந்தகுமாரி ஏற்பாட்டில் நிகழ்ச்சி அம்பத்தூரில் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர்.பாலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்று 100 கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
உதவித் தொகை
இதில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களான பேரிச்சம்பழம், ஹெல்த் மிக்ஸ், பழங்கள் உள்ளிட்டவைகளும் குழந்தைக்களுக்கான மெத்தை, பேபி கிட்ஸ் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன.
அறிவாலயம் அமைத்த கலைஞர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "அறிவாலயம் அமைத்த கலைஞரை இறை நம்பிக்கை கொண்டவர்கள் கடவுளாக பார்க்கிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய அறநிலைத்துறை மீதான விவாதம் நடைபெறும் போது கலைஞரின் நினைவிடம் கோயில் கோபுரம் போன்று தான் அலங்கரிக்கப்படும்.
காமாலை கண்ணுக்கு
இந்த நடைமுறை 2021 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று வருடம் இது அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் கண்கள் பூத்திருந்தது. காமாலை வந்தவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல தமிழக அரசு செய்வதை எல்லாம் குறை கூறக்கூடிய தினக்கூலியாக அவர்கள் உள்ளார்கள்.
கோபுர சின்னம்
அதுமட்டுமின்றி கருணாநிதியின் சமாதியில் அமைக்கப்பட்ட கோபுர சின்னம் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம். அதை முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் அமைப்பது தவறில்லை. ஏற்கனவே இதுபோன்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி இறை நம்பிக்கை
எனவே அறிவாலயம் கட்டி தந்த கலைஞரை இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனாக பார்க்கிறார்கள். அதனால் இது தவறில்லை தவறில்லை தவறில்லை" என்ற அழுத்தம் திருத்தமாக கூறினார். முன்னதாக கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் அமைக்கப்பட்டது தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகி அண்ணாமலை கடும் விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.
நம்பிக்கை இல்லாதவர்கள்
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பூஜை அறையில்
மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்." என விமர்சித்திருந்தார்.
நாராயணன் திருப்பதி
அது போல் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் ஒரு பதிவில் , "அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா? திராவிட மாடல் அரசின் அராஜகத்திற்கு எல்லையே இல்லையா? கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
இந்துக்களை இழிவுப்படுத்தும் செயல்
ஒட்டு மொத்த ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் இது. முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த செயலை கண்டிப்பதோடு, சமாதியின் மீது உள்ள கோபுரத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். ஹிந்து விரோத திமுக அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு. இந்த நாள் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சமாதி கட்ட துவங்கிய நாளாகட்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications