கிராம தரிசனம்.. தை பிறந்தால் காங்கிரஸூக்கு வழிபிறக்கும்! திமுக ஆட்சியில் பங்கு? செல்வப்பெருந்தகை நச்
சென்னை: தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என்றும் தமிழ்நாட்டில் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கீடு, வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் மக்களின் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் அரசியல் மற்றும் இந்தியா கூட்டணி குறித்து பேசினார்.. "தற்போது இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. யாரெல்லாம் சலனத்தோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தலாம். நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

விஜய்யின் அரசியல் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெறவே விஜய்யின் அரசியல் பிரவேசம் உதவும். விஜய்யின் பேச்சால் இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை. விஜய்க்கு மட்டுமே கூட்டம் கூடவில்லை. ராகுல் காந்தி வந்தபோது அதிக கூட்டம் கூடியது.
சட்டசபை தேர்தல்: கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை. அவர்கள் தான் முடிவெடுப்பார்கள். 2006ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியிடம் பெற இடம் பெறாமல், திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. அன்றைக்கு தமிழக முதல்வராக கலைஞர் இருக்கவேண்டும் என நிபந்தனையின்றி ஆதரவு கொடுத்தார் சோனியா காந்தி. அன்றைக்கு ஒருவேளை எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டிருந்தால் திமுக கொடுத்திருக்கும்.
உயிரோட்டம்: தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் கொண்டு வருவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். கட்சி வலிமையாக இருந்தால், கிராமங்களில் உயிரோட்டமாக இருந்தால் தான் பிற கட்சிகள் எங்களை தேடி வரும். தற்போது, ஆட்சியில் பங்கு, அதிகாரப்பகிர்வு எழுந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கீடு வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் மக்களின் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை வயநாட்டில் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். இதில், எம்பி., எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். வருகின்ற டிசம்பர் மாதம் 5ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கிராம கமிட்டிகள் சீரமைக்கப்படும். கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டறிய இயக்கம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
ஆலோசனை : அதைத் தொடர்ந்து கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமங்கள் நோக்கி செல்கிறோம். எங்கள் தலைவர் கிராம மக்களுடன் தங்கி பணியாற்றுவார்கள். காங்கிரஸில் மாவட்டங்களை பிரிக்க டெல்லி தலைமையுடன் ஆலோசனை நடந்து வருகிறது. இந்தியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை. தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும்" என்றார் செல்வப்பெருந்தகை












Click it and Unblock the Notifications