TVK Sengottaiyan: நான் என்று ஒருவர் நினைத்தால்..! தவெகவில் இணைந்தது ஏன்? பூரித்த செங்கோட்டையன்
சென்னை: நான் என்று ஒருவர் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக் கொள்வார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கியுள்ளார். மேலும் தான் தவெகவில் இணைந்தது ஏன் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் விஜய் முன்னிலையில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

இந்த நிலையில் செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியிட்டிருந்த விஜய், "20 வயது இளைஞராக இருந்தபோது எம்ஜிஆரை நம்பி, அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறிய வயதிலேயே எம்எல்ஏ என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு உறுதுணையாக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் செங்கோட்டையனை புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆதவ் பேசுகையில், வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் இணைந்து செங்கோட்டையன் ஒரு முக்கிய முடிவை எடுத்திருந்தார்.
அது போல் 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த போது அதிமுக இரண்டாக பிரிந்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பக்கம் நிற்பது என்ற முக்கிய முடிவை எடுத்திருந்தார்.
மூன்றாவதாக நமது தவெகவில் இணைந்துள்ளார். செங்கோட்டையன் எடுத்த அனைத்து முடிவுகள் ஒரு வரலாற்றையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்தியிருந்தன. அது போல் வரும் தேர்தலில் அண்ணன் செங்கோட்டையனின் வரவு நல்வரவாக எதிரொலிக்கும். எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு உதவியது போல் செங்கோட்டையன் விஜய்க்கும் உறுதுணையாக இருப்பார். 2026 இல் பெரிய வரலாற்றை உருவாக்குவோம் என்றார்.
செங்கோட்டையன் பேசுகையில், 2 நாட்களாக பத்திரிகை நண்பர்கள் படும்பாடுகளை நான் கண்கூடாக பார்த்தேன். எத்தனை இடர்பாடுகள் இருந்தாலும் என்னை துரத்தி துரத்தி பிடித்தீர்கள். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளங்களையும் பெற வேண்டும்.
அதிமுகவில் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டேன், 1972 ஆம் ஆண்டு அதிமுக என்ற இயக்கம் தொடங்கிய போது நான் அவருடன் இருந்தேன். 1975ஆம் ஆண்டு கோவையில் பொதுக் குழுவை கூட்டும் பொறுப்பை அரங்கநாயகமும் மணிமாறனும் என்னிடம் ஒப்படைத்தனர்.
இந்த பணிகளை சிறப்பாக செய்துவிட்டு சத்யா ஸ்டூடியோவில் எம்ஜிஆரை காண சென்ற போது கட்டி பிடித்து என்னை பாராட்டினார். அதிமுக தொடங்கிய போது இந்த கட்சி 100 நாட்கள் கூட தாங்காது என எதிர்க்கட்சிகள் சொன்னார்கள்.
அதிமுகவிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என ஜெயலலிதாவே என்னை பாராட்டினார். ஜெயலலிதா மறைந்த போதும் அதிமுக பிரிந்தது. நான் என்று ஒருவர் நினைத்தால் ஆண்டவன் தான் என்று கண்டித்து விடுவார். இறைவன் இருக்கிறார். நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். இதனால்தான் தேவர் ஜெயந்திக்கு போய் எல்லாரையும் ஒருங்கிணைக்கத்தான் சென்றேன்.
சென்றுவிட்டு திரும்பிய எனக்கு கட்சியின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதுதான் 50 ஆண்டுகளாக கட்சியில் உழைத்த எனக்கு கிடைத்த பரிசு. என்னை மட்டுமில்லை, என்னை சார்ந்தவர்கள் கூட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். நான் தவெகவில் இணைந்ததற்கு காரணம் இருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான். இரண்டும் ஒன்றாகவே பயணிக்கின்றன. அதனால்தான் தவெகவில் இணைந்தேன். தூய்மையான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதற்காக நான் தவெகவில் இணைந்தேன். தவெகவிற்காக வெற்றியை தர மக்கள் காத்திருக்கிறார்கள். 2026 ஆல் மக்கள் புரட்சி ஏற்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications