அடுத்தடுத்து ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள்.. எடப்பாடி டீம் கவுன்ட் இப்போ எவ்வளவு?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டசபை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அண்மையில், மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த நிலையில் தற்போது செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 59 ஆக குறைந்துள்ளது.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். அதிமுகவை ஒருங்கிணைக்கப் போவதாக செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். எடப்பாடி சுற்றுப்பயணம் உள்பட அவரது நிகழ்ச்சிக்களையும் செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார். இதனால் அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று சசிகலா, தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இதன் காரணமாக அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி நீக்கினார். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன்.
இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த செங்கோட்டையன், தவெகவில் இணைய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டசபை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அப்பாவுவை இன்று சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் செங்கோட்டையன்.
நாளை பனையூரில் தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் கோபிசெட்டிபாளையத்தில் எம்.எல்.ஏவாக இருந்து வருபவர். இடையே 1996 முதல் 2006 வரை மட்டுமே எம்.எல்.ஏ பதவியில் இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில், கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார் செங்கோட்டையன். ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த மனோஜ் பாண்டியன் அண்மையில் ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த நிலையில், கோபிசெட்டிப்பாளையத்தின் எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், வைத்திலிங்கம், அய்யப்பன் ஆகிய எம்.எல்.ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி அண்மையில் காலமானார். அதன்பிறகு 2 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 59 ஆக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications