டெல்லி அதிமுக அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியையும் புறக்கணித்த செங்கோட்டையன்- இபிஎஸ் அவசர ஆலோசனை!
சென்னை: டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா திமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியையும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இன்று புறக்கணித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கோவை அன்னூரில் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார்.
அண்ணா திமுகவில் சிறிது காலம் ஓய்ந்திருந்த அதிருப்தி குரல் சரமாரியாக வெடிக்க தொடங்கியிருக்கிறது. கோவை அன்னூரில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். இந்த பாராட்டு விழாவை புறக்கணித்த அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் புறக்கணித்ததால் நானும் நிகழ்ச்சியைப் புறக்கணித்தேன் என்றார்.

மேலும் சென்னையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் தாம் ஓரம்கட்டி ஒதுக்கப்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா புலம்பி பேசிய பேச்சும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர். அப்போது, டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைத்தார்.
ஆனால் இந்த நிகழ்ச்சியிலும் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் செங்கோட்டையனின் கலகக் குரல் அக்கட்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கோகுல இந்திராவின் வெளிப்படையான புலம்பலும் அதிமுக தலைமையை அதிர வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, செங்கோட்டையன் உள்ளிட்டோரின் புதிய அதிருப்தி குரல்கள் குறித்தும் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையன் சொன்னது என்ன?
எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய நிகழ்ச்சியை புறக்கணித்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்திய ஏற்பாட்டுக் குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது ஒரு வேண்டுகோள் வைத்தேன். எங்களை உருவாக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் அந்த விழாவில் இடம் பெறவில்லை. என்னிடம் கலந்து பேசி இருந்திருந்தால் அதை ஏற்பாட்டுக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பேன். இந்த விழா தொடர்பாக டிஜிட்டல் போர்டுகள், தட்டிகள் வைத்த போதுதான் என் கவனத்துக்கும் வந்தது. ஆகவே, என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் திருவுருவப் படங்கள் இல்லை. இத்திட்டத்தைக் கொண்டு வருவதற்காக 2011-ல் ஜெயலலிதா ரூ.3.75 லட்சம் வழங்கினார். இன்றைய அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடங்குவதற்கு ஜெயலலிதா அடித்தளமாக இருந்தார். அவரது படம் இந்த நிகழ்ச்சியில் இல்லை என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications