நீங்க 'கோபேக் மோடி' கறுப்பு பலூன் விடலாம்?அர்ஜூன் சம்பத்தை மட்டும் கைது செய்வீங்களா? எச்.ராஜா ஆவேசம்
சென்னை: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை நடத்தும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கறுப்புக் கொடி காட்டுவதாக அறிவித்திருந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பயணத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. இந்த பாத யாத்திரையை ராகுல் காந்தி நடத்துகிறார்.
மோடியை எதிர்த்தீங்கல்ல.. இப்போ பாருங்க.. ராகுலுக்கு கோபேக் சொல்வோம்.. அர்ஜுன் சம்பத் கொந்தளிப்பு
ராஜீவ் நினைவிடத்தில் ராகுல்
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் 2024 லோக்சபா தேர்தலை மையமாக வைத்தும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் ராகுல் காந்தி இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்த ராகுல் காந்தி இன்று ஸ்ரீபெரும்புதூரில் அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அர்ஜூன் சம்பத்- #GoBackRahul
இந்நிலையில் ராகுல் காந்தியின் தமிழகம் வருகைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், எது நடப்பினும் நாளை தமிழகம் வரும் தமிழின துரோகி ராகுலுக்கு கருப்பு கொடி இந்து மக்கள் காட்டுவது உறுதி என பதிவிட்டிருந்தார். அத்துடன் #GoBackRahul என்ற ஹேஷ்டேக்கையும் அதில் அர்ஜூன் சம்பத் இணைத்திருந்தார்.
திண்டுக்கல்லில் கைது
இதனிடையே கன்னியாகுமரியில் ராகுல் காந்திக்கு கறுப்பு கொடி காட்டுவதற்காக கோவையில் இருந்து நேற்று நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அர்ஜூன் சம்பத் பயணம் மேற்கொண்டார். இந்த தகவல் கிடைத்த போலீசார், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டதாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்தனர்.
எச்.ராஜா கண்டனம்
அர்ஜூன் சம்பத்தை தமிழக போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எதிர்க்கட்சியாக இருந்த திமுக மாண்புமிகு பிரதமருக்கு எதிராக கோ பேக் மோடி என்று கூறி கருப்பு பலூன் விட்டது.ராஜ்பவன் முன் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்தது. ஆனால் ராகுல் காந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட சென்ற அர்ஜூன் சம்பத் அவர்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.