செந்தில் பாலாஜி வழக்கு.. சரமாரியாக கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி வழக்கு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.. கைதாகி ஒரு வருடம் கடந்த நிலையில், இப்போதுவரை சிறையிலேயே இருந்து வருகிறார். 49-வது முறையாக அவரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது... சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட் என பல்வேறு நீதிமன்றங்களில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், கடந்த வாரம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுப் பதிவுக்காக, செந்தில் பாலாஜியை கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், கடந்த 21-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்..
மனு விசாரணை: இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கச்சொல்லி செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கைவைத்திருந்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.. இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவுசெய்ய வேண்டும் என்று கூறி, நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.
நேற்றுமுன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால், செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகவில்லை. எனவே, வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார் நீதிபதி அல்லி.
ஹைகோர்ட்: இதனிடையே, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் குற்றச்சாட்டுப் பதிவுசெய்வதைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல, சுப்ரீம்கோர்ட்டிலும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிடும்போது, "செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. உடல்நிலை மோசமாகியிருக்கிறது.. இதய அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டார்கள். ஆனால், அமலாக்கத்துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் என்பது எதுவுமே தெரியவில்லை. அவர்கள் எப்போது விசாரித்து முடிப்பார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என்றார்.
வழக்கு விசாரணை: இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பில் வாதாடுவதற்கு அவகாசம் கேட்கப்பட்டிருந்தது... எனவே, இந்த வழக்கு விசாரணையை 24-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது... அந்தவகையில், இன்றைய தினம் இன்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சரமாரி கேள்வி: பென்டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென சேர்க்கப்பட்டது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை பதில் வாதம் வைத்தது.
நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் அமலாக்கத்துறையால் இன்று பதில் வழங்க இயலவில்லை என்றால் நாளை தள்ளி வைக்கிறோம் பதில் கூறுங்கள் எனத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் உடல்நலம் சீரானதையடுத்து, "உங்களின் உடல்நலம் சீராகி உள்ளது. உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா? பிரச்சனை இல்லையென்றால் டிஸ்சார்ஜ் ஆகி கொள்ளலாம்'' என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கு செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆகி கொள்வதாக தெரிவித்தார். பின்னர், 3 நாள் சிகிச்சையில் அவரது உடல் நிலை தேறியதை அடுத்து அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பலவீனம்: ஆனால், செந்தில் பாலாஜி முன்பைவிட சற்று இளைத்து காணப்படுகிறார். மருத்துவமனைக்கு 2 நாட்களுக்கு முன்பு அவரை அழைத்து சென்றபோதே இது தொடர்பான வீடியோக்கள் மீடியாவில் வெளியாகியிருந்தன.. அப்போது முகத்தில் மாஸ்க் அணிந்து, உடல் மெலிந்து செந்தில் பாலாஜி காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications