இந்தியாவிலேயே சிகிச்சை எடுக்க சொல்லுங்க.. செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல ED கடும் எதிர்ப்பு
சென்னை: இருதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டு அசோக்குமார் மேல்முறையீடு செய்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ சிகிச்சைகளுக்காக செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதிக்க கூடாது என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது சகோதரர் அசோக் குமார் இருதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டு மனுவானது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் டி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அப்போது அமலாக்கத்துறைக்கு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அசோக்குமாருக்கு 9 முறை சம்மன் அனுப்பியும் ஒருமுறை கூட நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம். எனவே அவர் மருத்துவ சிகிச்சை என்று சொல்லி அமெரிக்கா செல்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் இல்லை என பதில் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கும் மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யும்படி அசோக்குமார் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த தகவல்களின் உண்மை தன்மை குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications