சீரியஸ் பிரச்சினையில் சீரியல் நடிகை.. 5 லட்சத்தை ஆட்டைய போட்ட அனாமிகா? பரபர புகாருடன் ‘மாஜி’ காதலன்!
சென்னை: தமிழ் சின்னத்திரை நடிகைகள் மீது அடுத்தடுத்து மோசடி புகார் எழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் கணவர் இருப்பதை மறைத்து திருமணம் செய்து 20 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக நடிகை ரிஹானா பேகம் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள் சின்னத்திரை நடிகை அனாமிகா மீது 5 லட்சம் ரூபாய் மோசடி புகாரை அளித்திருக்கிறார் ஐடி ஊழியர் ஒருவர்.
தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஈடாக சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது. பணம் கொடுத்து சென்று பார்க்கும் சினிமா நாயகிகளை விட வீட்டுக்கே வரும் சின்னத்திரை நாயகிகளுக்கு பெண் ரசிகைகள் அதிகம். இதனால் போட்டி போட்டுக் கொண்டு டிவி சேனல்கள் பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
அவற்றில் நடிக்கும் நடிகைகளுக்கு பொதுவெளியிலும் ஆதரவு அதிகமாகி கொண்டு தான் போகிறது. பட விழாக்கள், கடை திறப்பு என சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் பிசியாக இருக்கின்றனர். ஆனால் எந்த அளவுக்கு புகழ் வெளிச்சம் இருக்கிறதோ அந்த அளவு சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை ரிஹானா பேகம் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. திருமணமாகி விவாகரத்தாகி விட்டதாகக் கூறி ஹோட்டல் அதிபரை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு நடிகை மீது புகார் எழுந்திருக்கிறது. வேறு யாருமில்லை பிரபல சீரியல் நடிகை அனாமிகா தான்.
தற்போது இவர் யோகி பாபு நடிக்கும் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடந்தது என்ன என பாதிக்கப்பட்ட ஐடி ஊழியரே தெரிவித்திருக்கிறார். சென்னை கௌரிபாக்கத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரான ஹரிஷ் குங்ஃபூ பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரபல சீரியலில் நடித்து வரும் நடிகை அனாமிகாவும் பயிற்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணை பரிமாறி கொண்ட இருவரும் பேசி வந்திருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் ஹரீஷை காதலிப்பதாக அனாமிகா கூறி இருக்கிறார். தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஹரிஷ் கேட்க, தனக்கு கடன் இருப்பதாகவும் அதனை அடைத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என அனாமிகா சொன்னதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த பணத்தையும் அனாமிகாவுக்கு கொடுத்துள்ளார். தொடர்ந்து பல இடங்களுக்கு இருவரும் தனியாக சென்றபோதும் ஆயிரம் கணக்கில் பணத்தை அனாமிகா வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனாலும், இன்னும் பணம் வேண்டும் என அனாமிகா கேட்டிருக்கிறார். தன்னை ஏமாற்றுகிறாரோ என உணர்ந்த ஹரிஷ் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னிடம் வாங்கிய பணத்தையும் தர வேண்டும் என கேட்டுள்ளார். அனாமிகா பணத்தை தர முடியாது என்றும், காதலிக்கும் போது பணம் வாங்கினால் ஆண்கள்தான் தரவேண்டும்.. பெண்கள் தர தேவை இல்லை என்றும், உன் மீது பாலியல் புகார் அளித்து விடுவேன் என அனாமிகா மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹரீஷ் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் நடிகை அனாமிகா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் அடுத்தடுத்து மோசடி புகார்களில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications