முகத்தில் மயக்கப் பொடி பூசி.. சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. மிரட்டிய 4 பேர் கும்பல்!
சென்னை: திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜக்ட் செய்ய வந்த கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவியின் புகாரில் உள்ள உண்மைத்தன்மை தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மதுராந்தகம் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம், கிருஷ்ணகிரி பெண் குழந்தை வன்கொடுமை உள்ளிட்டவை பேசுபொருளாகியது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜக்ட் செய்ய வந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி திருச்சியில் இருந்து பிராஜக்ட் பணிக்காக அந்த மாணவி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த சில நாட்களிலேயே மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப் மூலமாக சிலர் அனுப்பி இருக்கின்றனர்.
அடையாறில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவி CLRIக்கு சென்ற மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி இருக்கிறது. இதன்பின் அந்த கும்பல் மாணவியின் முகத்தில் மயக்கப் பொடி பூசியதாகவும், ஒரு மணி நேரத்திற்கு பின் வேறு இடத்தில் இறக்கிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி உடல்நிலையில் மாற்றத்தை உணர்ந்துள்ளார்.
இதனால் கடந்த 10ஆம் தேதி மாலை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்பின் மாணவிக்கு என்ன நடந்தது என்ற அதிர்ச்சி தெரிய வந்துள்ளது. இதன்பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் வந்த பின், மீண்டும் அந்த கும்பல் காரில் கடத்தி இருக்கிறது.
அப்போது போலீசாரிடம் சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மீண்டும் காரில் கடத்தி சென்று வன்கொடுமை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆண் நண்பரிடம் நடந்ததை கூறி கதறி அழுதிருக்கிறார். இதன்பின் கல்லூரி மாணவி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாணவி புகார் தொடர்பான உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications