ஓபிஎஸ்க்கு திறக்கும் ‘ராயப்பேட்டை’ கதவு! சற்றே யோசிக்கும் எடப்பாடி டீம்! ரூட்டை மாற்றும் தேனி!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கும் நிலையில் தற்போது ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் சில சிக்னல்கள் கிடைக்க தொடங்கி இருக்கின்றன. இதனால் அதிரடி அரசியலை கைவிட்டு அமைதிப் பாதையில் பயணிக்கலாம் என தேனி தரப்பு திட்டமிட்டு இருக்கிறது.
அதிமுக இரட்டை தலைமை ஒழிக்கப்பட்டு ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்ததிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த பனிப்போர் தற்போது எரிமலையாய் வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
ஆரம்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக இல்லாமல் அமைதிப் போக்கை கையாண்டு வந்த நிலையில் அதற்கான பலனும் அவருக்கு கிடைத்தது. அதே நேரத்தில் செய்தியாளர் சந்திப்பு அறிக்கைகள் என அதிரடி காட்டினார் ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவில் நடந்த இரு பொது குழுக்களிலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பொரிந்து தள்ளினர். அப்போதும் அமைதி காத்தார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் இருந்து விரட்டப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் அவர் தரப்பு கடுமையாக எதிர்வினை ஆற்றியது. வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், தர்மர், சையது கான் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ்-க்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கொந்தளித்து பேசினர்.

பாஜக சமாதானம்
இப்படியாக அதிரடி நிகழ்வுகள் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான முடிவு கிடைக்குமா? என இரு தரப்பும் எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த விவகாரம் ஓடிக்கொண்டே இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர். இடையே பாஜகவும் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசி வருகிறது. முதலில் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்காமல் பேசி வந்த நிலையில் தொடர் அழுத்தம் காரணமாக தற்போது அவர் தரப்பைச் சேர்ந்த சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

சசிகலா - டிடிவி தினகரன்
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உறுதியாக கூறி வருகின்றனர். சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வரும் நிலையில் டிடிவி தினகரன் தொடர்ந்து பாஜக உதவியுடன் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். எடப்பாடியை எதிர்க்க வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தனமும் அவரது செயல்பாடுகளில் தெரிகிறது. இப்படியாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான சமிக்கைகள் அதிமுகவில் இருந்து கிடைத்து வருகிறது.

அமைதி வழி
இதனால் அதிரடி அரசியலை கைவிட்டு அமைதி வழி அரசியலை கையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். தானோ தனது ஆதரவாளர்களோ எடப்பாடி பழனிச்சாமியையோ அல்லது அவர் தரப்பு நிர்வாகிகளையும் வெளிப்படையாக விமர்சித்தால் அதிமுகவில் இணைவதற்கான வாசல் அடைக்கப்படும் என்பதால் அமைதி காக்க உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஆவேசம் காட்டி வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அமைதியாக இருக்கிறார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்கக் கூடிய கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருக்கும் தேனி தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அடுத்தடுத்து மாற்றங்கள்
இதனிடைய நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் அனைவருமே அமைதியாக இருப்பதுதான் கூட்டணிக்கு நல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என பாஜகவின் கருத்தையே டிடிவி தினகரனும் கூறி வருகிறார். இதனை ஓபிஎஸ் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருவதாகவும், வரும் காலங்களில் அதிமுக விவகாரங்களில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழலாம் என்கின்றனர் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications