சிங்கார சென்னை 2.0..வடகிழக்கு பருவமழை வெள்ளத்தை தடுக்க எல்லாம் தயார்.. மேயர் பிரியா
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் தயார் நிலையில் தற்போது மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை தத்தளிக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின. பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு சென்னையின் நகர் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. தி.நகர், மேற்கு மாம்பலம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.
மழைக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மூலம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு மாத கால பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர் சினேகா,அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி
ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா
ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் வகையில் சென்னை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அமெரிக்கா துணைத் தூதரகம் இரண்டு மாதம் பயிற்சி முகாம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றார். தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

சிங்கார சென்னை 2.0
சென்னையில் நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிகளை பொறுத்தவரையில் பல்வேறு திட்டங்கள் மூலம் பணி நடைபெற்று வருகிறது. முக்கியமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. மீதமுள்ள மழை நீர் வடிகாலின் இணைப்பு பணிகளை வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தடுப்பு
இரவு பகலாக சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என கூறினார். வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி தான் மிகவும் முக்கியமானது. கடந்த மழைக்காலத்தில் மழைநீர் தேங்கிய இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து அந்த இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

எதிர்கொள்ள தயார் நிலை
மேலும்,சென்னையில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக வெள்ளம் ஏற்பட்டால் பொது மக்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பத்தாயிரம் நபர்களுக்கு உணவு வழங்கும் வகையில் உணவு கூடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

ககன் தீப் சிங் பேடி
மேயரைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட பணியை விரைவு படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழைக்கும் முன்னதாக பணிகளை முடிக்க முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications